உருட்டைக்கட்டையால் கணவனைப் புரட்டி எடுத்த மனைவி.. அடி வாங்கியவர் ராணுவ வீரராம்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உருட்டுக்கட்டையால் முன்னாள் ராணுவ வீரரான தனது கணவரைத் தாக்கிய மனைவி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள ஆம்பள்ளியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிகிறார். இவரது மனைவி ரெஜினா. இந்தத் தம்பதியினருக்கு விஸ்வநாதன் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில், இந்தத் தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, அதே பகுதியில் தம்பதியினர் இருவரும் தனித் தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். பொங்கலை முன்னிட்டு, கிருஷ்ணன் ஆம்பள்ளிக்கு வந்தாராம். மனைவி ரெஜினா வீட்டுக்குச் சென்று மகன் விஸ்வநாதனிடம் பேசிக்கொண்டிருந்தராம்.
அப்போது, அங்கு வந்த ரெஜினாவுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ரெஜினா, வீட்டிலிருந்த உருட்டுக் கட்டையால் தாக்கியதில் கிருஷ்ணன் தலையில் காயமடைந்து மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து புகாரின் பேரில், மத்தூர் உதவி காவல் ஆய்வாளர் வீரமணி, ரெஜினா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.