கயிற்றால் கழுத்தை நெரித்து மனைவி கொலை.. தற்கொலை என நாடகமாடிய கணவன் கைது
கயிற்றால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை என்று நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்: மனைவியின் மீது சந்தேகப்பட்ட கணவன் மனைவியின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடினார். பிரேத பரிசோதனை அறிக்கையில் மனைவி கழுத்து நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கணவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலாம்பட்டி பஞ்சாயத்து மாவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சின்னமணி. கட்டடத் தொழிலாளியான இவருக்கு 28 வயதில் பூங்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் தர்ஷினி, தனிஷ்கா என 2 மகளும் உள்ளனர்.
சின்னமணிக்குக்கும் பூங்கொடிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் மீது சின்னமணிக்கு சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பூங்கொடி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்த வெண்ணந்தூர் போலீசார் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, பூங்கொடியின் தந்தை ஆத்தூர் வளையமாதேவி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். மேலும், பூங்கொடி கழுத்து நெரிக்கப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்தும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே பூங்கொடியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கையை மருத்துவர்கள் வழங்கினார்கள். அதில் பூங்கொடியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
இதன் அடிப்படையில் கணவர் சின்னமணியை நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது சின்னமணி, தனது மனைவி பூங்கொடி மீது சந்தேகம் இருந்ததையும், அதன் காரணமாக அடிக்கடி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்ததையும் ஒப்புக் கொண்டார். மேலும், சம்பவத்தன்று, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, சண்டையாக முற்றி, இறுதியில் பூங்கொடியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்ததையும் சின்னமணி ஒப்புக் கொண்டார். தன் மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, உடலை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு பூங்கொடி தற்கொலை செய்து கொண்டார் என்று நாடகமாடியதையும் சின்னமணி ஒப்புக் கொண்டார்.
பின்னர், ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னமணி, சேலம் நடுவன் சிறையில் அடைக்கப்பட்டார். மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை என்று கணவன் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.