எப்பப் பார்த்தாலும் குடித்து விட்டு சண்டை.. கழுத்தை அறுத்துக் கணவரைக் காலி செய்த மனைவி!
கரூர்: எப்போது பார்த்தாலும் குடிப்பது, சண்டை போடுவது என்று இருந்த கணவரால் மிகுந்த, மன வேதனை அடைந்த 48 வயது பெண் தனது 50 வயது கணவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.
குளித்தலை அருகே உள்ளது மாடு விழுந்தான் பாறை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நடராஜன் (50) இவருடைய மனைவி மீனா (48) இவர்களுக்கு, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.
மகன் ராம்குமார் லாரி டிரைவராக இருக்கிறார். திருச்சியில் உள்ளார்.
நடராஜன் குடிக்கு அடிமையாகி விட்டார். எப்போது பார்த்தாலும் குடிப்பது, மனைவியைப் போட்டு அடிப்பது என்று இருந்து வந்தார். அவரைத் திருத்த முயன்று மீனாவுக்கு தோல்வியே கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவுவும் போதையில் வந்த நடராஜன், மீனாவிடம், தகராறு செய்து விட்டு தூங்கி விட்டார். கணவரின் செயலால் கொதிப்படைந்த மீனா, இனியும் இவருடன் வாழ முடியாது என்று முடிவு செய்து, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை, கத்தியால், கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பிறகு, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது, நடராஜன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸார், நடராஜனின் உடலை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியதுடன், மீனாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
முதலில் குடி போதையில் நடராஜனே கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொண்டதாக முதலில் கூறினார் மீனா. ஆனால் போலீஸார் தீவிரமாக விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து மீனாவைப் போலீஸார் கைது செய்தனர்.