எதிரே வந்த மனைவியின் கள்ளக்காதலன்.. கட்டி உருண்டு சண்டை. கத்திக்குத்து.. "பூத்" அருகே பரபர!
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று சட்டசபைத் தேர்தல் திருவிழா பெரிய அசம்பாவிதம், மோதல்கள், வன்முறை எதுவும் இல்லாமல் அமைதியாகவும், அதேசமயம் மக்கள் மத்தியில் பெரும் உற்சாகமாகவும் நடந்து வருகிறது.
பல பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது, மழை காரணமாக வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் வாக்குப்பதிவின்போது பல சுவாரஸ்யங்களையும் வழக்கம் போல காண முடிந்தது. அதிலிருந்து சில...
எதிரே வந்த "கள்ள ஓட்டு"
வேடசந்தூர் அருகே ஓட்டு போட சென்றபோது மனைவியின் கள்ளக் காதலனைப் பார்த்த நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கொசவபட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி (40). இவரது மனைவி சுமதி (35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமலைராஜன் (38) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
ஒருவருக்கொருவர் சரமாரி குத்து
இன்று காலை முத்துச்சாமி மனைவி சுமதியுடன் அங்குள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு ஓட்டு போடச் சென்றார். ஓட்டு போட்டு விட்டுத் திரும்பியபோது, திருமலைராஜன் எதிரே வந்தார். அவரை பார்த்ததும் முத்துச்சாமி அவருடன் மோதினார். ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டனர். சுமதிக்கும் குத்து விழுந்தது. இந்த சண்டையால் வாக்குச் சாவடியில் பதட்டம் ஏற்பட்டது.
104 வயது தாத்தா
ஈரோடு மாவட்டத்தின் மூத்த குடிமகன் என்ற பெருமை பெற்றவர் 104 வயதான அந்தியூரைச் சேர்ந்த ரத்தினசபாபதி. இவர் 94 வயதான தனது மனைவி பச்சியம்மாளுடன் இன்று அந்தியூர் கிழக்கு பள்ளிக்கு வந்து ஓட்டுப் போட்டார்.
புது மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா!
திருப்பூர் முத்துபுத்தூர் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுதா (28) என்ற பெண்ணுக்கும் இன்று காலை திருமணம் நடந்தது. திருமணம் முடிந்துதம் மாப்பிள்ளையும், பெண்ணும் அப்படியே மணக்கோலத்தில் வாக்குச் சாவடிக்கு விரைந்தனர். அப்போது மணமகனுக்கு மட்டுமே ஓட்டு இருந்தது. இதனால் அவர் ஓட்டுப் போட்டார். மணப்பெண்ணின் பெயர் ஸ்லிப்பில் இல்லை என்று கூறி விட்டனர். இதனால் அவரால் ஓட்டுப் போட முடியாமல் போய் விட்டது.
கோவையில் பெண்கள் படை
கோவை மாவட்டத்தில் பெண்கள் இன்று அதிக அளவில் வாக்குகளைச் செலுத்த வந்தது கலகலப்பூட்டியது கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 28 லட்சத்து 33 ஆயிரத்து 249 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 2911 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
மழை அச்சம்
கோவையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் மழைக்கான அறிகுறிகளுடன் காணப்பட்டது. இதனால் கனமழை பெய்யக் கூடும் என கருதிய வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்கு விரைந்தனர். இதனால் வாக்குச் சாவடிகளில் கூட்டமாக இருந்தது. குறிப்பாக பெண் வாக்காளர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.