ஒற்றையாட்சியில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது: இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்
சென்னை: இலங்கையில் ஒற்றையாட்சியின் கீழ் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முகாமிட்டிருக்கும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் 2 நிர்வாகங்கள் செயல்படுகின்றன. எங்களது மாகாண சபை ஒரு நிர்வாகத்தையும் இலங்கை அரசு மற்றொரு நிர்வாகத்தையும் நடத்துகிறது.
மாகாண சபையின் செயலாளர் என்பவரைக் கூட எங்களுடன் ஆலோசிக்காமலேயே இலங்கை அரசு நியமித்திருக்கிறது. ஆளுநர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் ஒரு நிர்வாகமாகவும் மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் ஒரு நிர்வாகமாகவும் இயங்கி வருகிறோம்.
வடக்கு மாகாணத்தில் இலங்கை அரசு ரயில் திட்டம் போன்றவற்றை செயல்படுத்துவது உலகுக்கு அங்கே அனைத்தும் நன்றாக உள்ளது எனக் காட்டுவதற்காகத்தான். இதனால் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை.
போருக்குப் பின் தமிழ் மக்களுக்கு பிரத்யேகத் தேவைகள் இருக்கின்றன. இதற்கான திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். ஆனால் இலங்கை அரசு முழுமையான நிதி எங்களுக்குக் கிடைக்கவில்லை.
13வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலமாக தமிழர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்காது. இதை நடைமுறைப்படுத்தினால் பொருளாதார ரீதியான பயன் கிடைக்கும்.
இந்தியாவானது தனது சொந்த நலனைக் கருத்தில் கொண்டே தொடக்க காலம் முதல் ஈடுபட்டு வருகிறது. எங்களைப் பொறுத்தவரையில் இலங்கையின் ஒற்றைஉயாட்சி மூலமாக அரசியல் தீர்வு கிடைக்காது.
இவ்வாறு விக்னேஸ்வரன் தெரிவித்தார்.