புலி தோல் போர்த்திய பூனை.. 5 மணி நேரம் பீதியில் மாணவிகளை உறைய வைத்த "உறுமல்" சத்தம்
நாகர்கோவில் கல்லூரியில் காட்டுப்பூனை நடமாட்டத்தால் பீதி ஏற்பட்டது.
நாகர்கோவில்: 5 மணி நேரம் கல்லூரி மாணவர்களுக்கு உயிர்போய் உயிர் வந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
என்னா ஒரு பதட்டம்.. என்னா ஒரு கிலி! பாவம் பிள்ளைகள்... மரண பயத்தின் பீதியில் உறைந்து கிடந்து இயல்பு நிலைக்கு வருவதற்குள் தவித்தே போய்விட்டனர்.
அடர்ந்த மரங்கள், புதர்கள்
நாகர்கோவிலில் மையத்தில் உள்ளது செட்டிக்குளம். இங்கு மாவட்டத்தில் பழமை வாய்ந்த கல்லூரியாகவும், புகழ் பெற்ற கல்லூரியாகவும் திகழ்கிறது தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, சுமார் 3000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியின் வெளிப்புறத்தில் ஏராளமான குடியிருப்புவாசிகள் உள்ளனர். அத்தோடு வர்த்தக நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரியின் ஒரு பகுதியில் அடர்ந்து காடு போல மரங்களும், செடிகளும், புதர்களும் நிறைந்து பார்க்கவே காடுபோல இருக்கும்.
புலியின் உறுமல்
இந்நிலையில் கல்லூரி வழக்கமாக நேற்று நடந்துகொண்டிருந்தது. கல்லூரியின் பின்பக்கத்தில் புற்கள் வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர், அப்போது திடீரென உறுமல் சப்தம் ஒன்று புல் வெட்டி கொண்டிருந்தவர்களுக்கு கேட்டது. தொடர்ந்து கேட்கவும் சுதாரித்து கொண்ட தொழிலாளர்கள் சுற்றுமுற்றும் பார்த்தனர். அப்போது, பதுங்கியிருந்த புலி ஒன்று கல்லூரிக்குள்ளிருக்கும் இருக்கும் ஹாஸ்டலை நோக்கி ஓடியதை பார்த்தனர்.
கதவை மூடிய மாணவிகள்
இதனால் அலறியடித்துகொண்டு கல்லூரி நிர்வாகத்தினரிடம் சொன்னார்கள். நிர்வாகம், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல்அளித்தனர். இதனிடையே கல்லூரியில் தேர்வுகள் நடைபெறுவதால் மாணவ மாணவிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்பறை கதவுகளும் மூடப்பட்டன, என்றாலும் மாணவிகள் உள்ளுக்குளே அச்சத்தில் தவித்தனர். அடுத்த நொடி என்ன ஆகுமோ என்றே கலங்கினர். தற்போது விரைந்து வந்த வனத்துறையினர் புலி நடமாட்டம் குறித்து தேடுதல் வேட்டையில் இறங்கினார்.
பூனை புலியாகிடுமா?
5 மணி நேரமாக புலியை தேடினார்கள். புலி எங்கே என்றே தெரியவில்லை. யார் கண்ணிலும் படவும் இல்லை. ஆனால் புலிகள் சென்றதாக கூறிய அந்த பாதையிலிருந்த கால் தடங்களையும் பரிசோதனை செய்தனர். கடைசியாகத்தான் தெரிந்தது அது புலி இல்லை, காட்டு பூனை என்பது. இதனை தொடா்ந்து வெலவெலத்து போய்க்கிடந்த மாணவர்கள், குடியிருப்பு வாசிகள், எல்லோருக்கும் உயிரே அப்போதுதான் வந்தது.