வெறி பிடித்து அலையும் செந்நாய்,.. கடிட்டு இறந்த கடமான்.. நெல்லையில் மக்கள் பீதி!
நெல்லை: நெல்லை அருகே செந்நாய் அட்டகாசம் தலை தூக்கியுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளை சீக்கிரமே பூட்டிக் கொண்டு படுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு புலி, சிறுத்தை, கரடி, யானை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவை இரவு நேரங்களில் மலை அடிவாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் புகுந்து விடுகின்றன.
இந்நிலையில் களக்காடு வனச்சரகத்திற்கு உள்பட்ட சேரன்மகாதேவி அருகேயுள்ள பட்டங்காடு ஊருக்கு தென்பகுதியில் ரத்த காயத்துடன் கடமான் ஓன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. களக்காடு புலிகள் காப்பாக துணை இயக்குனர் முருகானந்தம் உத்தரவின்படி வனவர் சிவக்குமார், வனக்காப்பாளர் ராமன், செல்வராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்த கடமானுக்கு இரண்டு வயது இருக்கும். அது பெண் கடமான் என்று கூறப்படுகிறது. இரவு ஊருக்குள் புகுந்த கடமானை செந்நாய் விரட்டி கடித்து குதறியதால் இறநததாக தெரிய வந்தது. இந்த மான் கால்நடை டாக்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு களக்காடு முதலிருப்பான வனப்பகுதியில் மற்ற விலங்குகளுக்கு இறையாக கடமான் வீசப்பட்டது. இரவில் செந்நாய் கடித்தது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.