உடுமலை to பழனி… தொடரும் சின்னதம்பியின் பயணம்.. வனத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை
பழனி:பழனி அருகே, சின்னதம்பி யானை முகாமிட்டுள்ளதால், ஊருக்குள் புகாதவாறு வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
கோவை சின்னத்தடாகம், சோமையனூர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த சின்னதம்பி யானை, கடந்த 25ம் தேதி கும்கி யானைகள் துணையுடன், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப் பட்டு, பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனத்தில் விடுவிக்கப்பட்டது.
ரேடியோ காலர் கருவி மூலம் அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடந்த 29ம் தேதி வரை உலாந்தி வனச் சரகப்பகுதியில் சின்னதம்பியின் நடமாட்டம் காணப்பட்டது. 3
பின்னர் மானாம்பள்ளி வனச்சரகத்தின் கூமாட்டி, கருவறை பகுதியில் முகாமிட்டு இருந்தது.
பொள்ளாச்சி வனச்சரகத்தின் மைத்ரி, பனப்பள்ளம், பந்தகால் அம்மன்பதி வனப்பகுதி வழியாக வெளியேறிய யானை, பொங்காளியூர், மயிலாடுதுறை கிராமங்களில் உள்ள தென்னந் தோப்புக்குள் புகுந்தது. அங்கிருந்து கோட்டூர் பேரூராட்சியில் உள்ள குமரன் கட்டம் வழியாக ஊருக்குள் நுழைந்தது.
கோட்டூர் பேரூராட்சி பகுதியில் நுழைந்த சின்னதம்பி அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றுக்கும், பொது மக்களுக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் விளைநிலங்களுக்குள் நுழைந்தது.
உடுமலை பகுதிக்குள் 100 கிலோமீட்டருக்கு மேல் உணவின்றி சுற்றித்திரிந்ததால் அமராவதி சர்க்கரை ஆலை அருகே சின்னத்தம்பி யானை மயங்கி விழுந்தது.
பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்த சின்னத்தம்பி வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி, ஆனைமலை, உடுமலை பகுதிகளில் உலா வருகிறது. பழனி அருகே அமராவதி வனப்பகுதி மடத்துக்குளம், மைவாடி பகுதியில், சின்னதம்பி யானை முகாமிட்டு, பயிர்களை சேதப்படுத்தியது.
தற்போது, மை வாடி வனப்பகுதியில் சுற்றித் திரியும் சின்னதம்பி, பழனிக்குள் நுழைய வாய்ப்புள்ளது. அதனால், பழனி குடியிருப்புகள், போக்குவரத்து பகுதிக்குள் சின்னதம்பி யானை புகாத வகையில், வனத்துறையினர் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.