அரசு பஸ்ஸை வழிமறித்த யானைகள் கூட்டம்.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்
காட்டு யானைகள் அரசு பேருந்தை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
நீலகிரி: நடுரோட்டில் கூட்டமாக வந்து நின்று கொண்ட யானைகள் அரசு பஸ்ஸையும் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரியில் மஞ்சூர்-கோவை சாலை என்பது மிக முக்கியமான சாலை. இதனால் ஏராளமான அரசு பஸ்கள் இந்த சாலையில் சென்று கொண்டிருக்கும். ஆனால் சாலை வழியெங்கும் இருபுறமும் அடர்ந்த காடுகள் உள்ளன.
அந்த வனப்பகுதியில் எப்போதுமே யானைக்கூட்டம் முகாமிட்டும், புற்களை மேய்ந்து கொண்டு இருக்கும். அதனால் சாலையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு தன் இஷ்டத்திற்கு யானைகள் சென்று வந்து கொண்டிருக்கும். அதோடு காட்டெருமைகளும் நிறைய காணப்படும்.
இந்நிலையில், சம்பவத்தன்று மாலை 6.30 மணி இருக்கும். கோவை நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது 4 காட்டு யானைகள் பஸ்ஸை வழிமறித்தன. அதனுடன் ஒரு குட்டியும் இருந்தது. இதனால் வண்டியை முன்னோக்கி செல்ல முடியாமல் டிரைவர் திணறினார். அந்த யானைகளும் அங்கிருந்த நகர்வதாக இல்லை. அதனால் டிரைவர் பஸ்ஸை பின்னோக்கி மெதுவாக இயக்கினார். தூரமாக வந்து பஸ்ஸை நிறுத்திவிட்டு அதன் பின்னர் ஹாரன் அடிக்க தொடங்கினார்.
[பெட்ரோல் விக்கிற விலைக்கு எனக்கு வேற வழி தெரியல ஆத்தா...]
அந்த சத்தத்தை கேட்டும் யானைகள் வனப்பகுதிக்குள் மெதுவாக போக ஆரம்பித்தன. இதற்கே ஒரு மணி நேரம் ஆயிற்று. இந்த ஒரு மணி நேரமும் பயணிகள் பஸ்சுக்குள் உயிரை கையில் பிடித்து உட்கார்ந்திருந்தனர். பஸ் அப்படியே நின்றதும் அதன் பின்னால் ஏராளமான வண்டிகளும் வரிசை கட்டி நின்றன. யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பின்னரே பயணிகளுக்கு நிம்மதியே வந்தது.