மேற்குத்தொடர்ச்சி மலையில் விடிய, விடிய காட்டுத் தீ... பல ஆயிரம் ஏக்கர் மரங்கள் கருகின!
செங்கோட்டை: தமிழக-கேரளா எல்லைப் பகுதியான செங்கோட்டை அருகேயுள்ள வடகரை பகுதியில் அடர்த்தியான மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது. இங்கு நேற்று இரவு ஏற்பட்ட காட்டுத் தீயில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பிளான மரங்கள் அழிந்து போய் விட்டன.
இந்த மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை, மிளா, மான் உள்ளிட்ட அரியவகை விலங்கினங்கள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி கேரள மாநிலம் அச்சன் கோவில் வனப்பகுதியை ஒட்டிய தொடர்ச்சியான வனப்பகுதியாகும்.
இந்நிலையில் நேற்று வடகரை செம்போடை, வெள்ளக்கால் தேரி ஆகிய வனப்பகுதியில் திடீர் என தீ பிடித்தது. இத் தீ எராளமான விலை உயர்ந்த தேக்கு, ஈட்டி உள்ளிட்ட மரங்கள் நிறைந்த இந்த வனப்பகுதியில் பரவியது .காலை 11 மணியளவில் சிறிதாக பிடித்த தீ வெயிலின் கொடூரமான உக்கிரம் மறுபக்கம் காற்றின் வேகம் என இரண்டும் ஒருசேர தீ வனப்பகுதியில் அதிகரித்து மள மள வென வேகமாக பரவி வெயில் காய்ந்த கோரை புல்லில் பிடித்து பலநூறு ஏக்கர் வனப்பகுதியில் முழுமையாக பரவியது.
தொடர்ந்து வனத்துறையினர் சுமார் 25 பேர் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஒருபகுதியில் ஈடுப்பட்டபோது வேறு பகுதியில் தீபிடித்து எரியத் தொடங்கியது. அங்கு மிங்கும் வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். மாலை 5 மணிவரை தீ கட்டுக்குள் வரவில்லை. அதன் பின் இரவு நேரம் என்பதால் காற்றின் வேகம் அதிகரித்து 3 மலைகளிலும் ஒருசேர தீ பரவியது.
வன அலுவலர்கள் இல்லாததால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் நேற்று இரவு 10.30 வரை அதிகமாக இருந்ததால் இத்தீ கேரளா வனப்பகுதிக்குள்ளும் பரவும் அபாயம் ஏற்ப்பட்டநிலையில் அச்சன் கோவில் வனப்பகுதியில் திடீர் மழை காரணமாக அங்கு தீ பரவவில்லை.
இத்தீயின் காரணமாக விலை உயர்ந்த ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாயியுள்ளன. மேலும் இந்த வனப்பகுதியில் சமூக விரோத கும்பல்கள் யாரும் தீவைத்து சென்றனரா ..இல்லை மரங்களை வெட்டி கடத்தும் கும்பல்களின் சதி செயலா என்று தெரியவில்லை.
வனப் பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லாததால் மிருகங்களை வேட்டையாடும் கும்பல்கள் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடர்ந்த இந்த வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் அருகிலுள்ள தனியார் தோட்டங்களை குறிவைத்து உணவுக்காக ஊருக்குள் புகும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல ஆயிரம் ஏக்கர் வன நிலங்களில் உள்ள விலை உயர்ந்த தேக்கு, ஈட்டி உள்ளிட்ட மரங்கள் நாசமாகி வருகிறது. இன்று இரண்டாவது நாளாகவும் குறவன் பாறை எனும் பகுதியில் தீ பிடித்து எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.