ஊட்டியில் புகைப்பட கண்காட்சி: வரும் 31-ந்தேதி வரை கண்டுகளிக்கலாம்
வனவிலங்கு புகைப்பட கண்காட்சியினை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.
ஊட்டி: ஊட்டியில் தொடங்கப்பட்டுள்ள வனவிலங்கு குறித்த புகைப்பட கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகளும், அரிய வகை பறவை இனங்களிடன் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தின் இயற்கையை பாதுகாக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் நோக்கிலும், கோடை சீசனை முன்னிட்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் உதகை தோட்டக்கலைத்துறை அரங்கில் புகைப்பட கண்காட்சி ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.
வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த புகைப்பட கண்காட்சியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை, குரங்கு, பல்வேறு வகையான அரிய வகை பறவை இனங்கள் மற்றும் அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ள பறவைகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் 220 வகையான வண்ணத்து பூச்சிகள், பல்வேறு வகையான பாம்பு இனங்கள், மாவட்டத்தில் உள்ள அணைகள், 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த உதகையின் பழைய புகைப்படங்கள், நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களின் புகைப்படங்கள் என சுமார் 1500க்கும் மேற்ப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தனியார் நிறுவனத்தின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்புகைப்படை கண்காட்சியை காண கட்டணமின்றி இலவசமாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊட்டியில் சீசன் களைகட்டியுள்ள நிலையில் இப்புகைப்பட கண்காட்சியும் துவங்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இவற்றினை கண்டுகளிப்பதுடன் தங்கள் செல்போன்களில் புகைப்படங்களாக எடுத்து மகிழ்கின்றனர்.