திடீர் பரபரப்பு.. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கமல் போட்டி? பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வதை பாருங்க
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கமல் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியிடுவீர்களா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நழுவினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
பிக்பாஸ் நிகழ்ச்சி சர்ச்சையை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டியில், ஊழல் எல்லா இடங்களிலும் வியாபித்து உள்ளது என கூறியிருந்தார். இது அமைச்சர்கள் தூக்கத்தை கெடுத்துள்ளது.
எனவே, அமைச்சர்கள் எல்லாம், வரிசையாக கமலுக்கு எதிராக கடும் விமர்சனங்களை கூறிவருகிறார்கள். இதையடுத்து, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட எதிர்க்கட்சிகள் கமலுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளன.
எலும்பு நிபுணர்
அதேநேரம், அமைச்சர்களுக்கு போட்டியாக பாஜக தரப்பிலிருந்து தாக்குதல் அதிகமாக உள்ளது. பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் ஆக்ரோஷமாக கமலை கண்டித்து வருகிறார்கள். எச்.ராஜாவோ, கமலுக்கு முதுகெலும்பு இல்லை என அனலை கக்கினார். ஆனால், எலும்பு நிபுணர் என்ற அடைமொழியுடன், கமலிடம் பதிலடி வாங்கி கட்டினார்.
கமலை சுற்றி கேள்விகள்
இந்த நிலையில், தமிழக அரசியல் இப்போது கமலை மையமாக கொண்டு இயங்கத் தொடங்கியுள்ளது. அரசியல் வட்டாரங்களில் நாள் தோறும் பரபரப்பு கிளப்பப் பட்டுவருகிறது. அமைச்சர்கள், பாஜகவினர் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போதெல்லாம், நிருபர்கள், கமல் பற்றி ஏதாவது கேள்வி கேட்காமல் விடுவதில்லை.
முதல்வருக்கும் கோபம்
திமுக விழாவில், கமல், ரஜினி பங்கேற்கிறார்கள் என்ற செய்தி வந்ததும், முதல்வர் பழனிசாமியும் கோபமடைந்துள்ளார். "யாரையாவது தொங்கி, ஆட்சி கட்டிலில் ஏற, திமுக முயற்சிக்கிறது" என, கூறினார்.
பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இதேபோல மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில், ''கமல் என்ன சிந்தனையுடன் பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள கால அவகாசம் தேவை" என்றார். அப்போது நிருபர்கள் அவரே எதிர்பாராத கேள்வியொன்றை எழுப்பினர்.
ஆர்.கே.நகரில் கமல்
ஜெ. மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் கமல் போட்டியிட்டால், எதிர்த்து போட்டியிடுவீர்களா என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ''கமல்ஹாசன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து பாஜக சார்பில் வேட்பாளர் களமிறக்குவது பற்றி இப்போதே சொல்ல முடியாது. ஆனால் நான் போட்டியிடமாட்டேன்" என்றார்.