ஜூன் மாதம் வரைதான்.. அதன் பிறகு "சூ" வென அதிமுகவை விரட்டி விடப் போகும் பாஜக!
சென்னை: அரசியல் அரங்கில் இதுதான் இப்போதைக்கு ஹாட் டாப்பிக். வரும் ஜூன் மாதம் வரைதான் அதிமுகவை பாதுகாத்து பராமரிக்கும் பாஜக. அதன் பிறகு அதிமுகவை கை கழுவி விட்டு தமிழகத்தில் குடியரசுத் தலைவர் அமலாக்கப்படும் என்பதே அரசியல் மட்டத்தில் பேசப்படும் பேச்சாக உள்ளது.
ஜூலை மாதம் 25ம் தேதிக்குள் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தியாக வேண்டும். அதற்கான முஸ்தீபுகளில் பாஜக ஏற்கனவே இறங்கி விட்டது. தேவையான ஆதரவுகளை அது திரட்ட ஆரம்பித்து விட்டது.
இதன் காரணமாகத்தான் அதிமுகவை அரும்பாடுபட்டு அது அடை காத்துக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நேற்று விரிவாகப் பார்த்தோம்.
குடியரசுத் தலைவர் தேர்தல்
ஜூலை 25ம் தேதிக்குள் புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான வேலைகளை பாஜக ஏற்கனவே தொடங்கி விட்டது. பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது. அதேசமயம், அதற்கு ஒரு சிக்கலும் உள்ளது.
17,488
பாஜக வசம் தற்போது 5 லட்சத்து 31 ஆயிரத்து 954 வாக்குகள் உள்ளன. குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெற்றி பெற 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 வாக்குகள் தேவை. அதாவது பாஜகவிடம் 17,488 வாக்குகள் குறைவாக உள்ளன.
அதிமுக முக்கியம்
இந்த இடத்தில்தான் அதிமுக ஒரு அதிர்ஷ்ட வாக்காக அதன் வசம் வந்து சேர்ந்துள்ளது. ஜெயலலிதாவும் இல்லை என்பதால் எந்த சிக்கலும் இல்லாமல் அதிமுகவை தன் வசப்படுத்தி வைத்துள்ளது பாஜக. செலவும் இல்லாமல், சேதாரமும் இல்லாமல் அதிமுகவை வைத்து தனது நோக்கத்தை எளிதாக எட்டிப்பிடிக்க அது முடிவு செய்துள்ளது.
50 எம்.பிக்கள் - 134 எம்.எல்.ஏக்கள்
அதிமுக வசம் தற்போது இரு சபைகளையும் சேர்த்து மொத்தமாக 50 எம்.பிக்கள் லம்ப்பாக உள்ளனர். அதேபோல சட்டசபையில் 134 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் அப்படியே பாஜகவுக்கு வாக்களித்தாலே போதும், ஈஸியாக பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெற்றி பெற்று விடுவார்.
இதுதான் கணக்கு
இதுதான் பாஜகவின் கணக்காகும். அதாவது குடியரசுத் தலைவர் தேர்தல் வரைதான் பாஜகவுக்கு, அதிமுக தேவை. அதன் பிறகு நடப்பதைப் பாருங்கள் என்று சிலர் கண் சிமிட்டி மர்மமாக சிரிக்கிறார்கள். அதாவது அதிமுக ஆட்சி கலைக்கப்படும் என்பது இதன் பொருளாம்.
ஆட்சி கலைக்கப்படுமா?
ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்க வேண்டும். அதுபோல ஏகப்பட்ட சமாச்சாரங்கள் உள்ளன. இதெல்லாம் இருந்தால்தான் ஆட்சியைக் கலைக்க முடியும் மத்திய அரசு. ஆனால் தற்போது அதுபோல ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு அத்தகைய சூழல் எழலாம் என்றும் சிலர் மீண்டும் கண் சிமிட்டிச் சொல்கிறார்கள்.
காரணம் காட்டி கலைக்கப்படலாம்
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, நிர்வாகம் ஸ்தம்பித்துப் போய் விட்டது, மாநிலத்தின் நிலைமை சரியில்லை என்பது உள்ளிட்ட காரணங்களைக் கூறி ஆட்சியைக் கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.