கேரளாவில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி - முஸ்லீம் லீக்
புளியங்குடி: 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைப்போம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொது செயலாளர் காதர் முகைதீன் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் புளியங்குடியில் முஸ்லீம் லீக் நகர பொருளாளர் காஜா மைதீன் இல்ல திருமண விழா நடந்தது. இதில் பங்கேற்ற முஸ்லீம் லீக் தேசிய பொதுசெயலாளரும், மாநில தலைவருமான காதர் முகைதீன் கூறுகையில்,
வரும் 2014 நாடாளுமன்ற பொது தேர்தலை பற்றி பல்வேறு யூகங்கள் வந்த வண்ணம் உள்ளன. முஸ்லீம் லீக்கை பொறுத்தவரை கேரளாவில் காங்கிரசுடனும், தமிழகத்தில் திமுகவுடனும் தான் கூட்டணி.
இதற்கிடையே டெல்லியில் 17 கட்சிகளின் தலைவர்கள் கைகோர்த்து வகுப்புவாதம், மதவாதம், தீவிரவாதத்தை கட்டுபடுத்த வேண்டும் என்ற கோஷத்துடன், சிறுபான்மை, பெருபான்மை ஓரணியில் திரண்டதை வரவேற்கிறேன்.
17 கட்சிகள் சேர்ந்து வகுப்புவாதம், மதவாதம், தீவிரவாதத்திற்கு எதிராக 3வது அணியாக அமைத்தால் அதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவளிக்கும்.
மேலும் அரசியல் ரீதியாக முஸ்லீம்கள் ஒன்றுபட வேண்டும் என்று முஸ்லீம் லீக் வலியுறுத்துகிறது என்றார் அவர்.