தேசிய மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையங்களில் புகார்.. சோபியா தரப்பு அதிரடி முடிவு
Recommended Video
தூத்துக்குடி: சோபியா விவகாரம் குறித்து, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக சோபியா தரப்பு வழக்கறிஞர் அதிசயக்குமார் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசையை பார்த்து, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என விமானத்திற்குள் வைத்து கோஷமிட்டதாக தமிழிசை அளித்த புகாரின்பேரில், மாணவி சோபியாவை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.
290 ஐபிசி, மற்றும் மெட்ராஸ் சிட்டி போலீஸ் சட்டம் 75 ஆகியவற்றின்கீழ் சோபியாவிற்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. இரண்டுமே பிணையில் விடக்கூடிய சட்டப்பிரிவுகளாகும்.
சோபியாவிற்கு ஜாமீன்
இன்று, தூத்துக்குடி நீதிமன்றத்தில், சோபியா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, சோபியாவிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். சோபியாவிற்கு புத்திமதி கூறுமாறு, அவரின் பெற்றோருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
மனித உரிமைகள் ஆணையம்
இதன்பிறகு, சோபியா தரப்பு வழக்கறிஞர் அதிசயக்குமார் கூறுகையில், சோபியாவிற்கு நடந்த ஆபத்துகள் சம்மந்தமாக, தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களிடம் புகார் அளிக்க உள்ளோம்.
தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
இதேபோல, தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். மாநில மனித உரிமைகள் ஆணையம் தன்னிச்சையாக இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
8 மணி நேரத்திற்கும் மேலாக அச்சுறுத்தல்
ஏனெனில், 8 மணிநேரத்திற்கும் மேலாக இளம் பெண் மற்றும் மாணவியான சோபியா, காவல்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். விமான நிலையத்தில் பல முனை நெருக்கடிகளை அவர் சந்தித்துள்ளார். சிகிச்சைக்காக சோபியாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க கோரிக்கைவிடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.