நாளை மு.க.அழகிரி ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தப் போகிறாரா?
Recommended Video
சென்னை: மு.க.அழகிரி தரப்பிலிருந்து நாளை பரபரப்பான நிகழ்வுக்கு வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவரது ஆதரவாளர்களும் புது உற்சாகத்துடன் வலம் வருகின்றனர்.
திமுகவில் அசைக்க முடியாத தலைவராக விளங்கியவர் அழகிரி. என்னதான் கட்சித் தலைமை சென்னையில் இருந்தாலும் அழகிரியின் இருப்பும் அதற்கு நிகராக இருந்து வந்தது. தென் மாவட்ட திமுகவின் தூணாக பலர் இருந்தாலும் அவர்களையும் தாண்டி அழகிரி கண் அசைவு கட்டாயம் என்ற நிலையில் திமுக இருந்தது ஒரு காலம்.
இப்போது அது மலையேறி விட்டது. அழகிரி தற்போது திமுகவில் இல்லை. நீக்கப்பட்டு விட்டார். ஆனால் திடீரென தற்போது அழகிரிக்கு திமுகவுக்குள் ஒரு விதமான முக்கியத்துவம் உருவாகி வருகிறது. அழகிரி தேவை என்ற குரல் வலுத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு அழகிரி திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க ஆரம்பித்துள்ளது.
அழகிரியின் புத்துணர்ச்சி
சில காலமாக அமைதியாக இருந்து வந்த அழகிரி தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பித்துள்ளாராம். சமீபத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடி பேட்டி அளித்திருந்தார். அத்தோடு நிற்க மாட்டாராம், அடுத்தடுத்து அதிரடிகளுக்கு அவர் காத்திருக்கிறாராம்.
சென்னையில் அழகிரி முகாம்
தற்போது அழகிரி சென்னையில் முகாமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நாளை அவரிடமிருந்து அதிரடி நிகழ்வுக்கு வாய்ப்புள்ளதாக பேச்சும் அடிபடுகிறது. அவர் ஏதாவது அறிவிப்பாரா அல்லது புதிய திட்டம் எதையும் செயல்படுத்தப் போகிறாரா என்பது தெரியவில்லை.
மதுரையில் உற்சாகம்
அழகிரி மீண்டும் திமுகவுக்கு வர வேண்டும். அப்போதுதான் திமுக பழைய பலத்தைப் பெறும். இல்லாவிட்டால் பெரும் சிக்கல்தான் வரும் என்று அழகிரி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக மதுரையில் உள்ள அழகிரி ஆதரவாளர்கள் புதிய உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.
ரஜினியை சந்திக்கிறார் அழகிரி
புதிய அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை சந்திக்கவும் அழகிரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ரஜினியுடன் இணைந்து அழகிரி செயல்படப் போகிறாரா அல்லது ரஜினி உதவியுடன் மீண்டும் திமுகவுக்குத் திரும்பப் போகிறாரா என்பது தெரியவில்லை.
மொத்தத்தில் அழகிரி தரப்பு புதிய உற்சாகத்துடன் காணப்படுவதை அரசியல் வட்டாரமே உன்னிப்பாக கவனித்து வருகிறது.