செல்போன் பாட்டு பிரியர்களே… ஹெட்போனில் மட்டுமே பாட்டு கேளுங்க!
திருநெல்வேலி: நள்ளிரவு நேரத்தில் பேருந்தில் பயணம் செய்தாலும் நிம்மதி கெடும் வகையில் சத்தமாய் செல்போனில் பாட்டு கேட்டு வருகின்றனர் சில இளைஞர்கள்.
அமைதியான பாட்டு என்றாலும் கூட சகித்துக் கொள்ளலாம், ஒன்று குத்துப்பாட்டாக இருக்கும், அல்லது விரசங்களைத் தூண்டும் வகையிலான பாடலாக இருக்கும்.
இதுபோன்ற பாடல்களைக் கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் உடன் பயணிப்பவர்களுக்கு நேரிடும் சங்கடங்களை யாரும் கண்டுகொள்வதில்லை.
பேசமட்டுமே செல்போன்
செல்போன் அறிமுகமான ஆரம்ப காலத்தில் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டது. இன்று முகம் பார்த்து பேசுவதற்கு மட்டுமல்லாமல், பாடல்களை கேட்கவும், படம் பார்க்கவும், வீடியோ கேம் விளையாடவும் பயன்படுத்தப்படுகிறது.
போட்டோதான் அதிகம்
இப்போதுள்ள காலகட்டத்தில் செல்போன்கள் பேசுவதற்கு மட்டும் என்ற நிலையில்லாமல் இன்டர்நெட்டில் சாட்டிங் செய்வதற்கு மட்டுமல்லாமல் வீடியோ, புகைப்படம் எடுக்கவும், அவற்றை உடனுக்குடன் பேஸ்புக்கில் பதிவு செய்யவும் பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு அதிநவீன வசதிகளுடன் வந்துள்ளன.
பாட்டு கேட்கும் கலாச்சாரம்
இன்றைக்கு சாதாரண செல்போன்களில் கூட மெமரிகார்டுகளை போட்டு பாடல் கேட்க்கும், படம் பார்க்கும் வசதிகளும் உள்ளது. தற்போது செல்போன்களை உபயோகப்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை பேசுவதற்கு பயன்படுத்துகின்றனரோ இல்லையோ பாடல்களை கேட்கவும், சாட் செய்யவுமே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
பஸ், ரயிலில் இடையூறு
பொது இடங்களில் கூட சிலர் நாகரீகம் தெரியாமல் செல்போன்களில் சத்தமாக பாடல்களை போட்டு கேட்பதை நாம் அன்றாட வாழ்வில் கண்கூடாக கண்டு வருகிறோம். தாங்கள் வேலை செய்யும் இடங்களில் மட்டுமல்லாமல் பஸ், ரயில் போன்றவற்றில் பயணிக்கும் நேரத்திலும் பலர் செல்போன்களில் சத்தமாக பாடல்களை கேட்டபடி பயணிக்கின்றனர்.
ஹெட்போன் போட்டு
இதில் சிலர் மட்டும் பிறருக்கு இடையூறு இல்லாமல் ஹெட்போன்களை காதில் மாட்டிக்கொண்டு பாடல் கேட்கின்றனர். பெரும்பாலோனோர் தங்களால் தன்னோடு பயணிப்பவர்களுக்கு இடையூறாக இருக்குமே என்பதை பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் சத்தமாக பாடல்களை கேட்டுக்கொண்டுதான் பயணிப்பார்கள்.
ஈவ் டீசிங்
சில இளசுகள் செல்போன்களை பாடல்களை போட்டு பெண்களை கேலி செய்வதும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அருவெறுக்கும் பாடல்களைப் போட்டும் சீண்டுகின்றனர்.
வயதானவர்கள், குழந்தைகள்
இதுபோன்று சத்தமாக பாடல் கேட்பவர்களால் வயதானவர்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், அமைதியை விரும்புவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இதை யாராவது தட்டிக்கேட்டால் அவர்களுக்குள் இது தொடர்பாக வாக்குவாதமும் ஏற்பட்டு சண்டையில் போய் முடிகிறது.
தடை விதிக்க வேண்டும்
எனவே, பஸ்களில் செல்போன்களில் பிறருக்கு இடையூறாக பாட்டு கேட்கவும், படம் பார்க்கவும் காவல்துறையினர் தடை விதிக்கவேண்டும் என்று சமூகஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காவல்துறை எச்சரிக்கை
இதுபோன்ற தடை உத்தரவு கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களிலுள்ள பஸ்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.இம்மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பஸ்களில் ''செல்போன்களில் பிறருக்கு இடையூறாக சத்தமாக பாடல் கேட்கக்கூடாது மீறினால் காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்பது போன்ற காவல்துறையினரின் எச்சரிக்கை அறிவிப்பு ஸ்டிக்கர்கள் போக்குவரத்து கழகத்தினரால் ஓட்டப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும்...
இதுபோன்ற எச்சரிக்கை அறிவிப்பு ஸ்டிக்கர்களை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு, தனியார் பஸ்களிலும் ஓட்டுவதற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.
ஜாதி சண்டைகள்...
தென்மாவட்டங்களை பொறுத்தவரை ஜாதி, இன, மத மோதல்கள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. பலரும் பயணிக்கும் பஸ்களில் ஒருவர் கேட்கும் ஜாதி, மத ரீதியான பாடல்கள் சிலபல நேரங்களில் தேவையில்லாத விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எச்சரிக்கை நோட்டீஸ்
எனவே காவல்துறையினர், அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களுடன் கலந்து ஆலோசித்து இதில் துரித நடவடிக்கை எடுத்திடவேண்டும். எச்சரிக்கை அறிவிப்பு தொடர்பான ஸ்டிக்கர்களை பஸ்கள் மட்டுமல்லாது ரயில்களிலும் ஓட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திடவேண்டும். இதுமாதிரியான அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தேவையில்லாத சங்கடங்களை தவிர்க்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.