'மீண்டும் கலக்குவோம் தம்பி!' - ஆதரவாளரிடம் உருகிய நாஞ்சில் சம்பத்!
தேர்தல் வரும் போது மீண்டும் கலக்குவோம் என நாஞ்சில் சம்பத் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார்.
Recommended Video
சென்னை: தேர்தல் வரும் போது மீண்டும் கலக்குவோம் என நாஞ்சில் சம்பத் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார்.
அரசியல் மேடைகளில் இருந்து ஒதுங்கியிருக்கிறார் நாஞ்சில் சம்பத். ' தேர்தல் வந்தால்தான் நான் ஒருவன் இருக்கிறேன் என இந்தக் கட்சிகளுக்குத் தெரியும். நமக்கு உறுதியாக வாய்ப்பு வந்து சேரும்' என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார் சம்பத்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கியதில் இருந்தே, அந்த அமைப்பினருடன் முரண்பட்டார் நாஞ்சில் சம்பத். அதற்கு முன்புவரையில், ' திராவிட இனத்தைக் காக்க வந்த ஒரே தலைவன் தினகரன்' எனப் பேசி வந்தவர், அ.ம.மு.க தொடங்கியதும், ' திராவிடம் என்ற பெயர் இல்லாத இடத்தில் நான் இருப்பதில்லை' எனக் கூறிவிட்டு வெளியேறினார்.
புறக்கணிப்பதாக நினைத்தார்.
ஆனால் சம்பத் ஆதரவாளர்களோ, ' அ.ம.மு.கவின் அடுத்தகட்ட நிர்வாகிகளுக்கு யாரை எப்படி நடத்த வேண்டும் என்பது தெரியவில்லை. மேடையில்கூட சம்பத்தை உட்கார விடுவதில்லை. அவரை வேண்டும் என்றே புறக்கணிப்பதாக நினைத்தார். அதனால்தான் வெளியேறினார்.
அமைதியான நாஞ்சில்
இனி வரும் நாட்களில் மாவட்டம்தோறும் மாணவர்களுக்கு இலக்கிய பயிற்சி எடுக்க இருக்கிறார்' எனத் தெரிவித்தனர். இதனையடுத்து, ஒரு சில தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர், பிறகு அமைதியாகிவிட்டார்.
மீண்டும் கலக்குவோம் தம்பி
நேற்று சம்பத்திடம் அவரது ஆதரவாளர் ஒருவர் பேசும்போது, ' நீங்கள் பேசாத அரசியல் மேடைகளை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. மீண்டும் உங்களை எதிர்நோக்குகிறோம்' எனக் கூற, ' நான் ஒருவன் இருக்கிறேன் என இப்போதைக்கு யார் கண்ணிலும் தெரியாது. தேர்தல் வந்தால்தான் இந்த சம்பத் இருக்கிறான் என்பதையே அறிவார்கள். மீண்டும் கலக்குவோம் தம்பி' எனக் கூறியிருக்கிறார்.
வேண்டிய வசதிகள்
இதுகுறித்து நம்மிடம் பேசிய சம்பத் ஆதரவாளர் ஒருவர், " திவாகரன் தரப்பில் இருந்தும் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ' நீங்கள் விரும்பும் அண்ணா பெயரிலேயே கட்சியைத் தொடங்கியிருக்கிறோம். உங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தருகிறோம்' எனவும் கூறியுள்ளனர்.
தேர்தல் வரும்போது
இதற்கு சம்பத் எந்தவித உறுதியும் அளிக்கவில்லை. மீண்டும் தினகரனுடன் சமரசத்தை ஏற்படுத்த அவரது நலன் விரும்பிகள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வரும்போது அப்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுப்போம் என்ற மனநிலையில் இருக்கிறார்" என்றார்.