ஐடி ரெய்டில் சிக்கிய கீதாலட்சுமிக்கு வழங்கப்பட்ட பிசி ராய் விருதும் பறிப்பு?
வருமானவரி சோதனையில் சிக்கிய எம்ஜிஆர் மருத்தவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி அண்மையில் பெற்ற பி.சி. ராய் விருது பறிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
சென்னை: வருமான வரித்துறை சோதனையால் டாக்டர் கீதாலட்சுமிக்கு வழங்கப்பட்ட பி.சி.ராய் விருது பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறந்த மருத்துவருக்காக வழங்கப்படும் விருது பி.சி.ராய் விருது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த விருதிற்கு இந்த ஆண்டு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் கீதாலட்சுமிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து கீதாலட்சுமி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் பலகோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாகவும் வருமானவரித்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.
இதனையடுத்து, இன்று விருகம்பாக்கத்தில் உள்ள கீதாலட்சுமி இல்லத்தில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மருத்துவ கல்லூரிகளில் கீதாலட்சுமி முறைகேடு செய்திருப்பது தொடர்பான ஆவணங்கள் சிக்கி இருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு கடந்த வாரம் வழங்கப்பட்ட சிறந்த மருத்துவருக்கான பி.சி. ராய் விருது பறிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.