தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு... சென்னையில் 3 நாள் பொங்கல் விழா: கருணாநிதி
சென்னை: தை முதல் நாளை ஏழை - பணக்காரர் வேறுபாடின்றி தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த 23-1-2008-ல் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், தை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பை காங்கிரஸ் சார்பில் இ.எஸ்.எஸ். ராமன், பாமக சார்பில் கி. ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என். நன்மாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை. சிவபுண்ணியம், மதிமுக சார்பில் மு. கண்ணப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கு. செல்வம் ஆகியோர் சட்டப்பேரவையில் வரவேற்றுப் பேசினர்.
1939-ல் திருச்சியில் நடைபெற்ற அகில இந்தியத் தமிழர் மாநாட்டில் சோமசுந்தர பாரதியார், பெரியார், மறைமலை அடிகள், பாரதிதாசன், திரு.வி.க., தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், பி.டி. ராஜன், பட்டுக்கோட்டை அழகிரி, உமாமகேசுவரனார், ஆற்காடு ராமசாமி முதலியார் ஆகியோர் பங்கேற்றனர். அதில் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவிக்கப்பட்டது.
2008-ல் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டதும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் அதனை ஆதராங்களுடன் வரவேற்றனர்.
ஆனாலும் 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தனர்.
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
இதனால் திமுகவுக்கு எந்த அவமானமும் இல்லை. அதிமுக அரசின் முடிவால் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு இல்லை என ஆகிவிடாது. நான் ஏற்கெனவே தெரிவித்தவாறு, சித்திரை முதல் நாளில் விழா கொண்டாடுவோரை நாம் தடுக்க மாட்டோம். தை முதல் நாளை ஏழை - பணக்காரர் வேறுபாடின்றி தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பொங்கல் விழா
தென் சென்னை மாவட்ட திமுக கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது. ஜனவரி 16 வரை 3 நாள்களுக்கு நடைபெறும் இவ்விழாவில் 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கிறார்.
பொங்கல் கலை நிகழ்ச்சிகள்
முதல் நாளான செவ்வாய்க்கிழமை இஞ்சிக்குடி இ.எம். சுப்பிரமணியம் குழுவினரின் நாதஸ்வரம், காரியாப்பட்டி ராமர் குழுவினரின் தப்பாட்டம், தஞ்சாவூர் யோகராணி குழுவினரின் கரகாட்டம், வில்லிவாக்கம் ஹமீது குழுவினரின் சிலம்பாட்டம், ஈரோடு பம்பை கைச்சிலம்பம், சின்னகுமார் குழுவினரின் இன்னிசை ஆகியவை நடைபெறும்.
நாதஸ்வரம், தப்பாட்டம்
2-ஆவது நாளான புதன்கிழமை (ஜன. 15) தஞ்சாவூர் நாகு குழுவினரின் நாதஸ்வரம், திருவண்ணாமலை முனுசாமி குழுவினரின் பெரிய மேளம், கோயில்பட்டி குமரராமன் குழுவினரின் கரகம், அரக்கோணம் தமிழ்க் குழுவினரின் தப்பாட்டம், அந்தோணிதாசன் குழுவினரின் இன்னிசை ஆகியவை நடைபெறும்.
தோல்பாவைக்கூத்து
இறுதி நாளான வியாழக்கிழமை (ஜன. 16) பொள்ளாச்சி மகேந்திரன் குழுவினரின் ஜிக்காட்டம், அலங்காநல்லூர் வேலு குழுவினரின் தப்பாட்டம், பட்டுக்கோட்டை லிம்போ கேசவன் குழுவினரின் நையாண்டி, வேடந்தாங்கல் மணிமாறன், திண்டுக்கல் சக்தி, பால்ஜேக்கப் ஆகிய குழுக்களின் இசை நிகழ்ச்சி, உரியடி விளையாட்டு, பரமபதம், தோல்பாவைக் கூத்து, கொக்கிலி கட்டை ஆகியவை நடைபெறும்.
ருசியான உணவுத் திருவிழா
மூன்று நாள்களும் நடைபெறும் உணவுத் திருவிழாவில் விருதுநகர் கொத்து பரோட்டா, வீச்சு பரோட்டா, பலவகை பிரியாணி, பலவகை தோசை, மதுரை மெஜுரா சிக்கன், செட்டி நாடு உணவு வகைகள், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, மதுரை ஜிகர்தண்டா, மதுரை பிரேம விலாஸ் அல்வா ஆகியவை கிடைக்கும்.
கண்காட்சியும் உண்டு
விழாவில் கைவினைப் பொருள்கள் கண்காட்சியும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை தென் சென்னை மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை நிர்வாகிகள் செய்து வருவதாக திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.