இந்தியாவின் 18 அலுவல் மொழிகளிலும் பாரதி கவிதைகள் அச்சிடப்படுமா?
பாரதியாரின் கவிதைகளை அரசியல் நிர்ணய சட்டம் அங்கீகரித்துள்ள 18 மொழிகளில் வெளியிட வேண்டும் என பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது.
சென்னை: பாரதியாரின் பாடல்களை 18 மொழிகளிலும் அச்சிட்டு வெளியிட வேண்டும். இதற்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
எட்டையபுரத்தில் பிறந்த முண்டாசுக் கவிஞன், சுப்பிரமணிய பாரதியார். அவரது 96 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தேச பக்திப் பாடல்கள், ஞானப் பாடல்கள், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு என 266 படைப்புகளை பாரதியார் அளித்துள்ளார்.
பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்
பாரதியாரின் கவிதைகளை அரசியல் நிர்ணய சட்டம் அங்கீகரித்துள்ள 18 மொழிகளில் வெளியிட வேண்டும் என பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த கோரிக்கையை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை 2008ஆம் ஆண்டு நிராகரித்தது.
இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றத்தின் பொதுச் செயலர் ரா.லெட்சுமிநராயணன் உயர் நீதிமன்ற கிளையில் 2011ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக சாகித்ய அகாடமி மற்றும் தேசிய புத்தக அறக்கட்டளையை அணுகலாம் என 2011ஆண்டு மார்ச் 23ஆம் தேதி உத்தரவிட்டது.
இது தொடர்பாக பல முயற்சிகள் எடுத்தும் எதுவுமே கைகூடவில்லை. இந்தநிலையில் மத்திய கலாச்சாரத் துறை செயலருக்கு லட்சுமிநாராயணன் செப்டம்பர் முதல் வாரம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பாரதியாரின் பாடல்களை தமிழ்நாடு அரசு தேசிய உடமையாக்கியுள்ளது.
பாரதியார் தேசிய கவியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது சிலை நாடாளுமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளது. பாரதியாரின் பாடல்கள் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. இப்பாடல்களை பிற மாநிலத்தவர்கள் எப்படி தெரிந்து கொள்வார்கள். இதனால் பாரதியாரின் பாடல்களை 18 மொழிகளிலும் அச்சிட்டு வெளியிட வேண்டும். இதற்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.
தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
என்ற பாரதியின் கவிதையை பாரதியின் 96வது நினைவுநாளில் நினைவு கூர்வோம்.