அடுத்தடுத்து வறண்டு வரும் ஏரிகள்... குடிநீருக்கு என்ன செய்யும் சென்னை?
சென்னையின் முக்கிய நீர் ஆதார ஏரிகள் எல்லாம் வறண்டு வருவதால் சென்னையில் குடிநீர் விநியோகம் குறைந்து வருகிறது. இதனால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
சென்னை: சென்னையின் பிரதான குடிநீர் ஆதாரங்களான ஏரிகள் எல்லாம் வறண்டு விட்டது.கல்குவாரி குட்டைகளில் நீர் எடுப்பதை கிராம மக்கள் எதிர்ப்பதால், மாற்று ஏற்பாடாக என்ன செய்வது என்று தெரியாமல் குடிநீர் வாரியம் திணறி வருகிறது. இதனால் சென்னையில் பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.
சென்னையின் குடிநீர் தேவையை செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, சோழவரம், பூண்டி ஏரி, வீராணம் ஏரி ஆகிய ஏரிகள்தான் பூர்த்தி செய்து வருகின்றன. சென்னையின் குடிநீர் தேவை நாளொன்றுக்கு 1200 மில்லியன் லிட்டர். ஆனால் தற்போது வெறும் 800 மில்லியன் தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா நதிநீர் தண்ணீர் திறந்துவிடுவதை சில நாட்களுக்கு முன்பு நிறுத்திவிட்டதால், சென்னை முழுக்க முழுக்க இந்த ஏரிகளை மட்டுமே நம்பி உள்ளது. ஆனால் ஏரிகள் வறண்டு வருகின்றன.
இந்நிலையில்தான் சோழவரம் ஏரியில் உள்ள கல்குவாரிகளில் உள்ள பெரும் பள்ளங்களில் தேங்கியுள்ள குட்டை நீரை சென்னை குடிநீர் வாரியம், ராட்சத மோட்டர்களை வைத்து உறிஞ்சி, அதனை குழாய்கள் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பி அங்கிருந்து சுத்திகரித்து விநியோகிக்கப்படுகிறது. இதற்கு ஆறு ராட்சத மோட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ராட்சத மோட்டார் மூலம் நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் குறைந்து விடும் அபாயம் உள்ளது. பிறகு உள்ளூர் மக்கள் தண்னீருக்கு எங்கு போவார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் வாழும் கால்நடைகளின் நிலை இன்னும் மோசமாகும். குடிநீர் இல்லாமல் அவை மடிந்து போகும் வாய்ப்பு உள்ளது என அஞ்சி, மக்கள் இதனை எதிர்க்கின்றனர்.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தற்போது எந்தவொரு ஆதாரமும் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் முழி பிதுங்கி வருகின்றனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகிக் கொண்டுள்ளது.
மக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து அரசு விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயமாகிறது.