நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு.. கமல்ஹாசனுக்கு ஆலோசனை வழங்கும் டிரம்ப்பின் ஆலோசகர்!
Recommended Video
கோவை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். மாறாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் பயிலரங்கம் கோவையில் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்விற்கு பின் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில்தான் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் பேசினார்.
ஆலோசனை
அவர் தனது பேட்டியில், பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்கள் இதில் பேசப்பட்டது. பல்துறை வல்லுனர்கள் இதில் வந்து பேசினார்கள். தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை அளிக்கப்பட்டது. எப்படி பிரச்சாரம் செய்வது, கட்சியை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்று விவாதிக்கப்பட்டது.
டிரம்ப் ஆலோசகர்
டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் பிரச்சார அறிவுரையாளராக இருந்த அவினாஷ் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இது ஒரு துளிதான், இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. நாங்கள் இன்னும் சொல்ல வேண்டியதும், செய்ய வேண்டியதும் நிறைய இருக்கிறது. விரைவில் இன்னொரு பயிலரங்கு நடக்கும்.
பாஜக பற்றி
பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்தும் இதில் பேசினோம். மக்கள் நலனை அரசுகள் கருத்தில் கொண்டால் விலையை குறைக்க வாய்ப்புள்ளது. பாஜக உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்து பேசலாம். ஆனால் அவர்களுக்கு எதிராக மாறுபட்ட கருத்தே இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள். அது தவறான விஷயம்.
உள்ளாட்சி தேர்தல்
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் கலந்து கொள்ள மாட்டோம். இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை. ஆனால் தேர்தல் காலத்துக்கு செல்வோம். அங்கு மக்களை சந்திப்போம். உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட கூடாது என்று நினைக்கிறோம்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவு
இந்த களம் மிகவும் சிறியது. வேறு ஒரு பெரிய களம் இருக்கிறது. அதற்காக ஆயத்தமாகி வருகிறோம். வேறு ஒரு தேர்தல் வருகிறது . அதற்கு ஆயத்தம் செய்ய வேண்டும். கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தம் நடக்கிறது. மாற்றம் வேண்டும் என்றால் பெரிய தேர்தலில் நிற்க வேண்டும். அதில் நிற்போம்.
கூட்டணி முடிவு
நீதிமன்றத்தையும், நீதியையும் யாரும் தவறாக பேச கூடாது. சாதாரண மக்கள் அல்ல அரசியல்வாதிகள் கூட அவமதிப்பாக பேச கூடாது. தேர்தலில் தனித்து நிற்பதா, கூட்டணியா என்றுதான் விவாதித்து வருகிறோம். தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம்.