தமிழகத்தில் 1 லட்சம் பேரை 'தாய் மதம்' திருப்புவோம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்
சென்னை: தமிழகத்தில் ஒரு லட்சம் பேரை தாய் மதத்திற்கு திருப்ப உள்ளோம் என்று இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று அர்ஜுன் சம்பத் பேசினார். தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் கிறிஸ்தவர்கள் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், இஸ்லாமியர்கள் சார்பில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, பாஜக சார்பில் வானதி சீனிவாசன் ஆகியோரும் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
ஆக்ராவில் இஸ்லாமியர்கள், இந்து சமயத்திற்கு சென்றது குறித்த விவாத நிகழ்ச்சி அது. அதில் தமிழகத்திலும் தாய்மதம் திரும்ப வைக்க பல முயற்சிகளை எடுத்து வைப்பதாக அர்ஜுன் சம்பத் வெளிப்படையாக தெரிவித்தார்.
அர்ஜுன் சம்பத் கூறியதாவது:
இந்தியாவில் இந்துக்கள் இருந்தனர்
இந்தியாவில் ஒரு காலத்தில் 100 சதவீதம் இந்துக்கள்தான் இருந்தார்கள். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்தான் நம்மை மத ரீதியாக கபளீகரம் செய்தனர். முதலில் வாள்முனையில் மதமாற்றம் செய்யப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் அரசு உதவியுடன் மதமாற்றம் நடந்தது. ஆனால் இந்து மதம் வரலாற்றில் எப்போதுமே பிற மதத்தவர்களை மதம் மாறுங்கள் என்று வலியுறுத்தியது கிடையாது.
மகாத்மா காந்தி விமர்சனம்
சமீபகாலமாகத்தான் தாய் மதத்திற்கு திரும்ப வாருங்கள் என்ற கோஷத்தை நாங்கள் முன்வைக்க தொடங்கியுள்ளோம். ஆசை வார்த்தை சொல்லியும், அச்சுறுத்தியும் யார் மதமாற்றம் செய்து வந்தனர் என்பது உலகத்திற்கே தெரியும். மகாத்மா காந்தி அரிசி கிறிஸ்தவர்கள், கோதுமை கிறிஸ்தவர்கள் விமர்சனம் செய்தது வரலாறு. வறுமையில் இருந்த இந்தியர்களுக்கு அரிசியையும், கோதுமையையும் கொடுத்து மதமாற்றம் செய்ததைத்தான் காந்தி இவ்வாறு கூறினார்.
மதமாற்றம் இதுவரை செய்ததில்லை
சரித்திரத்திலும், நடைமுறையிலும் இந்துக்கள் இதுவரை மதமாற்றம் செய்யப்போனது கிடையாது. பிற மதத்திற்கு சென்றவர்களை தாய்மதத்திற்கு திருப்பும் ஏற்பாடும் இதுவரை கிடையாது. முடவர் நடக்கிறார், குருடர் பார்க்கிறார் என்று நாங்கள் கூறிய மோசடியாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு மதமாற்றத்தில் ஈடுபட்டதில்லை. நாங்கள் இப்போதுதான் தாய் மதம் திருப்பும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய தொடங்கியுள்ளோம். ஆனால் அதற்கே இவ்வளவு கண்டனங்களா..
பாகிஸ்தானை பறிகொடுத்தோம்
1000 ஆண்டுகால ஆட்சியின் விளைவாக ஏற்கனவே 22 சதவீத முஸ்லீம்கள், 33 சதவீத நிலப்பரப்பை (பாகிஸ்தான்) கொண்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு இந்தியாவில் இருந்த 2 சதவீத முஸ்லிம்கள், இப்போது 13 சதவீதத்தினராக அதிகரித்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மிசோராம் மாநிலங்களில் பெருகிவிட்ட கிறிஸ்தவர்கள் அவற்றை தனிநாடாக அறிவிக்க கேட்டுவருகின்றனர்.
கிறிஸ்தவத்தில் ஜாதி வேறுபாடு
தலித் கிறிஸ்துவர்கள் என்று கூறி சர்ச்சுகளுக்குள் தலித்துகளை விடமறுக்கும் சம்பவங்கள் அதிகரித்துவருகிறது. எனவே பாதிக்கப்பட்ட 800 குடும்பங்களை தாய்மதம் திருப்பியுள்ளோம். இன்னும் 1 லட்சம் குடும்பங்கள் தாய் சமயம் திருப்ப முயற்சி செய்வோம். பிற மதங்களுக்கு சென்றவர்களை மட்டுமே எங்கள் மதத்திற்கு வருமாறு அழைக்கிறோம். இந்து மதத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துகிறோம் வாருங்கள் என்று மட்டுமே கூறுகிறோம். தாய் மதம் திருப்புவதற்காக திட்டம்போடுவதோ, நிதியை செலவிடுவதோ எப்படி தவறாகும்? இதற்காகத்தானே, இந்து அமைப்புகள் உள்ளன.
டிவி சேனல்கள் மூலம் மதமாற்றம்
இந்தியாவிலுள்ள பிற மதத்தவர்களின் மூதாதயர்கள் இந்துவாக இருந்து வேறு மதத்திற்கு போனவர்கள். அவர்கள் தாய் மதம் திரும்புவதுதான் நாட்டுக்கும் நல்லது, உலகத்திற்கும் நல்லது. நாங்கள் யாரையும் அச்சுறுத்தவில்லை, மிரட்டவில்லை. அன்பாக அழைக்கிறோம். தமிழகத்தில் கிறிஸ்தவ மத பிரச்சாரத்திற்கு என்றே 7 தொலைக்காட்சிகள் உள்ளன. கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்திற்கு வருமாறு தெருமுனை பிரச்சாரம் செய்கிறார்கள். ஏசு அழைக்கிறார் என்று தெருமுனைகளில் போஸ்டர் ஒட்டுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கிறிஸ்தவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். அதே நேரம், சிவபெருமான் அழைக்கிறார் என்று நாங்கள் என்றுமே கூறி மதமாற்றத்திற்கு அழைப்புவிடுத்தது கிடையாது.
இந்துக்கள் இழந்தது அதிகம்
பாதிப்பின் வலி அதிகமாக உள்ளதால், இப்போதுதான் நாங்கள் அதை செய்ய ஆரம்பித்துள்ளோம். நம்மிடமிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானில் ஏன் அமைதியில்லை. ஈராக், ஈரானில் ஏன் அமைதியில்லை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த உலகிலேயே மோசடி மதமாற்றத்தால், கட்டாய மற்றும் வாள்முனை மதமாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்து மதம் மட்டுமே. இப்போதுதான் இந்துக்களில் சிலர் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். இந்துக்கள் மதம் மாறியதால்தான் நாட்டை இழந்தோம். பஞ்சாப் மாகாணம் பறிபோனது. சிந்து நதியை இழந்தோம். இனிமேலும் இழக்க வேண்டாம், அனைத்து மத சகோதரர்களும் தாய் மதம் திரும்ப அழைக்கிறோம்.
ராமானுஜர் வழியில் நடப்போம்
ஜாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிராக போராடிய சமூக நீதியாளர் ராமானுஜர். அவரின் 1000வது திருநட்சத்திரம் அன்று தமிழகத்தில் 1 லட்சம் பேரை தாய் சமூகத்திற்கு திருப்புவோம். ராமானுஜர் வழியை பின்பற்றி ஏற்றத்தாழ்வின்றி சரிசமமாய் வாழுவதற்காக இந்த சேவையை செய்வோம். இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.