திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து விரைவில் முடிவு செய்வேன்.. விஷால் பரபர!
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்வேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்வேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார்.
தமிழக அரசியல் மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.
இதில் திமுக அதிமுக என்று அனைத்து கட்சிகளும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் முடிவில் விஷால் இருப்பதாக தகவல்கள் வருகிறது.
ஆர்.கே நகர்
நடிகர் விஷால் ஏற்கனவே ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. இந்த நிலையில் ஆர்கே நகர் குறித்தும், திருப்பரங்குன்றம் தேர்தல் குறித்தும் விஷால் சென்னையில் நடந்த சினிமா விழா ஒன்றில் பேசியுள்ளார்.
தேர்தலில் போட்டி
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து இப்போதய முடிவு செய்யவில்லை. இது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். விரைவில் இதுகுறித்து முடிவு செய்வேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அறிவிப்பை வெளியிடுவேன். அதன்பின்பே தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பேன் என்றுள்ளார்.
திருப்பரங்குன்றம் தேர்தல்
ஏற்கனவே திருப்பரங்குன்றம் தேர்தலில் திமுக, அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல் தினகரனின் அமுமுகவும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளது. மேலும் மு.க அழகிரியும் திமுகவிற்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வாய்ப்புள்ளது. இதனால் இந்த தேர்தல் பலமுனை போட்டியாக மாற வாய்ப்புள்ளது.
கருணாஸ் குறித்து
விஷால் தனது பேட்டியில் கருணாஸ் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், யாராக இருந்தாலும் வரம்பு மீறி பேச கூடாது. அப்படி பேசினால் அரசு நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும். நடிகர் கருணாஸின் கைது தவறான விஷயமாக தெரியவில்லை. அரசு சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்து இருக்கிறது, என்றுள்ளார்.