ஜெ.வை பார்க்கவேயில்லை என்று அடித்து கூறும் அமைச்சர்கள்...என்ன சொல்லப்போகிறார் தீபக்?
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை என்று சொன்ன அமைச்சர்கள் ஜெ.வை பார்க்கவேயில்லை என்று கூறியுள்ள நிலையில், மருத்துவமனையில் அத்தையைப் பார்த்தாக சொன்ன தீபக் என்ன சொல்லப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை : ஜெயலலிதாவை பார்க்கவேயில்லை என்றும் அவர் இட்லி சாப்பிட்டதாக சொன்னதெல்லாம் பொய் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ள நிலையில், ஜெ.வை மருத்துவமனையில் பார்த்ததாக சொன்ன தீபக் என்ன சொல்லப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகம் கிளப்பினர். ஆனால் ஜெ.விற்கு அளிக்கும் சிகிச்சையில் எந்த மறைவும் இல்லை, அவர் நல்ல முறையில் தான் இருந்தார் எங்களுடன் பேசினார் என்றெல்லாம் அளந்து விட்டனர் அதிமுகவினர்.
ஜெ. மரணமடைந்து ஓராண்டிற்குப் பிறகு தாங்கள் சொன்னது அனைத்துமே பொய் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உண்மையை போட்டு உடைத்தார். அமைச்சரின் இந்த கருத்தால் ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.
அதிகாரிகளுடன் நடந்த கூட்டம்
ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் இருந்த 75 நாட்களுமே அங்கேயே இருந்த அமைச்சர்கள் அவரை சந்திக்கவே இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களிலேயே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மருத்துவமனையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக செய்திகள் அப்போது வெளியாகின. ஆனால் அப்போதும் புகைப்படம் எதுவும் வெளியிடப்படவில்லை.
யார் முடிவு செய்தது?
ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் யாருமே பார்க்கவில்லை என்றால் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பு பொய்யானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. டெல்லியில் இது தொடர்பான கூட்டத்தில் அமைச்சர் பழனிசாமி பங்கேற்பார் என்று ஜெ. அறிவுறுத்தியதாகக் கூறியதும் பொய்யா, அப்படியானால் இந்த முடிவுகளையெல்லாம் யார் எடுத்தார்கள் என்பதும் மர்மமாகவே உள்ளது.
ஆதரவாகச் சொன்ன தீபக்
இதே போன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உடல் நலம் சரியில்லாமல் அத்தை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நானும் அங்கு தான் 70 நாட்கள் இருந்தேன் என்று கூறியிருந்தார். அத்தைக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆவணங்கள் சிலவற்றில் நானும் சசிகலா அத்தையும் கையெழுத்திட்டோம் என்றும் கூறியிருந்தார்.
அதிகாரிகளைப் பார்த்தார்
ஜெயலலிதா 72 நாட்களாக சிகிச்சை பெற்றபோது எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை தேறி வந்தநிலையில் அதிகாரிகளுடன் அவர் பேசினார். தொடர்ந்து தலைவர்கள் வந்து பார்த்து சென்றனர் என்றும் தீபக் கடந்த டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கூறியிருந்தார்.
நன்றாக இருந்தார்
அப்படி இருக்கும் போது அப்பல்லோ போன்ற பெரிய தனியார் மருத்துவமனையில் மர்மம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனக்கு தெரிந்த வகையில் கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கு முன்பு அன்றைய தினம் 3.30 மணிவரை நன்றாக தான் இருந்தார். எனவே அவரது மரணத்தில் மர்மம் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றும் தீபக் தெரிவித்திருந்தார்.
அதே நிலைப்பாடா
அமைச்சர்கள் தாங்கள் ஜெயலலிதாவைப் பார்க்கவேயில்லை என்று இப்போது கூறியுள்ளனர். இந்நிலையில் 70 நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்ததாகச் சொன்ன தீபக் ஜெ. மரணம் குறித்து இப்போதும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.