டிஜிபி மாற்றம்.. திமுகவின் கோரிக்கை தீவிரப் பரிசீலனையில்.. தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: தமிழக டிஜிபி ராமானுஜத்தை மாற்ற வேண்டும் என்று திமுக வைத்துள்ள கோரிக்கை குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறோம். விரைவில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த பொதுத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இத்தகவலை அவர் தெரிவித்தார். தலைமை தேர்தல் ஆணையர் வி.சி.சம்பத், பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, அவர் சென்னை வந்தார். சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சம்பத். அப்போது அவர் கூறியதாவது...
மாநில வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள்
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பின்னர் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் பங்கு பெறும் ஆலோசனை கூட்டம், வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) நடத்தப்படும்.
கட்சிகளுடன் ஆலோசனை
அகில இந்திய அளவில் கடந்த 4-ந்தேதி அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் எந்த தேதியில், எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஒரே நாளில் வாக்குப் பதிவு
இந்த விவகாரங்களில் அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
டிஜிபி மாற்றப்படுவாரா
தமிழகத்தில் உள்ள டி.ஜி.பி.யின் பதவிகால நீட்டிப்பு குறித்தும், அவரை தேர்தல் பணிக்கு அனுமதிக்க கூடாது என்றும், ஒரு கட்சி சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அதை பரிசீலித்து வருகிறோம். விரைவில் அது குறித்து முடிவு செய்யப்படும்.
ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல்
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டசபை தேர்தலும் நடத்தப்படும்.
தமிழகத்தில் 21 லட்சம் புதிய வாக்காளர்கள்
தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியல், கடந்த ஜனவரி 10-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் புதிய வாக்காளர்களாக 21 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
10 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்ட சரிபார்ப்பு பணியின் அடிப்படையில் 10 லட்சம் பேர், முகவரி இல்லை என்ற காரணத்துக்காக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஆனால் போலிகள் அல்ல...
இவர்களை போலி வாக்காளர்கள் என்று கூறி விட முடியாது. ஏனென்றால் பலர் இடம் மாறி சென்று இருக்கலாம். பலர் வீடுகள் மாறி இருக்கலாம். என்றாலும், பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்கள் முகவரி சம்பந்தபட்ட ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம்.
அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப்...
கடந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இனி இதற்கு அவசியம் இருக்காது. ஏனென்றால் அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்குசாவடி சீட்டு அதாவது பூத் ஸ்லிப் தரப்படவுள்ளது. எனவே அதை வைத்தோ அல்லது புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை வைத்தோ ஓட்டு போடலாம். தனியாக புகைப்பட சான்று தேவைப்படாது என்றார் சம்பத்.