ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனைக்கு வாய்ப்பு
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: சிறுமி ஹாசினி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது. தூக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் ஆறு வயது மகள் ஹாசினி திடீரெனக் காணாமல் போனார். இதுகுறித்து ஹாசினியின் தந்தை பாபு அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
ஹாசினி வசித்து வந்த அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் மீது சந்தேகம் வந்ததால் அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தஷ்வந்த் கைது
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி ஹாசினியை தஷ்வந்த் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்ததுடன், சிறுமியின் உடலை வெளியே கொண்டுசென்று எரித்தது தெரியவந்தது.
இதையடுத்து வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
நகைக்காக கொலை
காவல்துறையினர் நீதிமன்றத்தில் உரிய விளக்கமளிக்காததால், நீதிமன்றம் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த், தனது பெற்றோருடன் வசித்துவந்தார். இந்நிலையில், டிசம்பர் 2ஆம் தேதி தஷ்வந்தின் தாய் சரளா கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து தலைமறைவான தஷ்வந்தை தேடிய தனிப்படை போலீசார், மும்பையில் கைது செய்து, சென்னை கொண்டு வந்தனர்.
தஷ்வந்த் வக்கீல்
இந்த நிலையில், டிசம்பர் 13ஆம் தேதி தஷ்வந்தை, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த பெண்கள், யாரும் எதிர்பாராத நிலையில் செருப்பு உள்ளிட்டவற்றால் தஷ்வந்தைத் தாக்கினர். இந்த வழக்கில் இருந்து விலகுவதாக தஷ்வந்தின் வழக்கறிஞர் விஜயகுமார் அறிவித்தார்.
அம்மாவை கொல்லவில்லை
இதனால், தானே வாதாடுவதாக தஷ்வந்த் நீதிபதியிடம் தெரிவிக்க, இலவச சட்ட ஆலோசனை மையத்தை நாடுமாறு நீதிபதி வேல்முருகன் அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து ஹாசினி கொலை வழக்கில் தினந்தோறும் சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் அழைத்து வரப்படுகிறார். நான் ஹாசினியையும், என் அம்மாவையும் கொலை செய்யவில்லை என தஷ்வந்த் கத்தி பேசுவதால் அவரை ஊடகங்களிடம் நெருங்கவிடாமல் காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் செல்கின்றனர்.
விரைவில் விசாரணை
ஹாசினி கொலை வழக்கு தொடர்பாக மொத்தம் 34 சாட்சிகளை காவல்துறையினர் தயார் செய்துள்ளனர். இதுவரை 20 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. டி.என்.ஏ. டெஸ்ட் போன்ற 14 சாட்சியங்கள் இன்னும் விசாரிக்கப்படவில்லை. மீண்டும் வழக்கு விசாரணை ஜனவரி 8ஆம் தேதி வரவுள்ளது.
அதிகபட்ச தண்டனை
அப்போது மற்ற சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் தஷ்வந்திற்கு எதிராக சாட்சிகள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி மாதமே வர வாய்ப்புள்ளது. அதில் தஷ்வந்திற்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறி வருகின்றனர்.
பலாத்கார வழக்கில் தண்டனை
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர், இரட்டை கொலைகள் செய்துள்ள தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார். சிறுமி பலாத்கார வழக்கில் விசாரணை முடிவடைந்து தஷ்வந்திற்கு எதிரான தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது என்றே வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.