திமுக பக்கம் ஓடி வரும் சசிகலா குடும்பம்!
Recommended Video
சென்னை: திமுக பக்கம் நின்று போராடத் தயார் என்று சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியிருப்பதன் மூலம் திமுக உதவியை சசிகலா குடும்பம் நாடுவதாக தெரிகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தாலும் கூட தினகரன் தரப்பு தொடர்ந்து வீம்பாக, விடாப்பிடியாக இருந்து வருகிறது. இதனால் தொடர்ந்து குழப்பம் கோலோச்சிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் திமுக பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளது தினகரன் தரப்பு. இன்று மன்னார்குடியில் பேசிய திவாகரன், ஸ்டாலினைப் பாராட்டிப் பேசினார்.
காவிரியை வைத்து
திவாகரன் தனது பேட்டியின்போது கூறுகையில், காவிரி பிரச்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து போராடத் தயார் என்று கூறினார் திவாகரன். இது கவனிப்புக்குரியதாகியுள்ளது.
ஸ்டாலினைப் பாராட்டுகிறேன்
மேலும் அவர் கூறுகையில், தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது அவரது அரசியல் நிலைப்பாடு. அவர் ஒருபோதும் சந்தர்ப்பவாத அரசியலை கையில் எடுக்கமாட்டார். அந்த வகையில் மு.க.ஸ்டாலினை மனதார பாராட்டுகின்றேன் என்றார் திவாகரன்.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
சசிகலா தரப்பில் தற்போது எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்ற துருப்புச் சீட்டு உள்ளது. இதை அவர்கள் செய்தால் திமுகவின் ஆதரவும் கிடைக்கும் என்று சசிகலா தரப்பு எதிர்பார்க்கிறது.
திமுக உதவியுடன் எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க திட்டமா
நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தால் நிச்சயம் அதை திமுக ஆதரிக்கும் என்று கணக்கு போடுகிறது தினகரன் தரப்பு. கண்டிப்பாக எடப்பாடி அரசுக்கு ஆதரவாக திமுக வாக்களிக்காது. எனவே நிச்சயம் எடப்பாடி அரசு கவிழும் என்ற கணக்கில்தான் திமுக பக்கம் பார்வையை தினகரன் தரப்பு திருப்புவதாக கருதப்படுகிறது.