கூண்டோடு ராஜினாமா? தீவிர யோசனையில் அண்ணா அறிவாலயம்??
திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: திமுகவின் 89 எம்எல்ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. அப்படி ராஜினாமா செய்தாலும் அதிமுக ஆட்சிக்கு ஆபத்து வராது என்றே அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
89 பேர் கொண்டிருக்கின்ற கூடிய திராவிட முன்னேன்ற கழகத்தினுடைய பந்து வந்தால் ஆளுநர் என்ன நட வடிக்கை எடுப்பீர்கள். அந்த பந்தை நாங்கள் கொண்டு போகிறோமா? கொண்டு போகவில்லையா? என்பது ஒரு கேள்விக்குறி என்று ஆகஸ்ட் மாதமே ஆளுநரை பார்த்து கேட்டார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
இது எங்களுடைய சுய நலத்திற்காக அல்ல, திமுகவின் சுய நலத்திற்காக அல்ல. தமிழக மக்களின் நன்மைக்காக அந்த முடிவை நிச்சயமாக எடுக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் அப்போதே சஸ்பென்ஸ் வைத்து பேசினார் ஸ்டாலின். இந்த பந்து என்பது கூண்டோடு ராஜினாமா என்பதுதான் என்று நாம் ஏற்கனவே செய்தி போட்டிருந்தோம். அதைக் கடைசிக் கட்டமாக திமுக பயன்படுத்தலாம் என்றும் கூறியிருந்தோம்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
இந்த நிலரையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்த ஸ்டாலின் இது சம்பந்தமாக ஆளுநரை சந்திப்பது இதுதான் கடைசி முறை என்றும் கூறினார்.
Recommended Video
உரிமை மீறல் பிரச்சினை
சட்டசபைக்குள் குட்கா போதைப் பொருள் கொண்டு சென்றது தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டு உள்ளது. திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
இதனை எதிர்த்து திமுகவினர் தொடர்ந்த வழக்கில், திமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ள உயர்நீதிமன்றம் வழக்கை அக்டோபர் 12ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
18 பேர் டிஸ்மிஸ்
இந்த சூழ்நிலையில்தான் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் தனபால். சூட்டோடு சூட்டாக எம்எல்ஏக்கள் பதவி காலியாக இருப்பதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நடவடிக்கை பாயும்
இதே போல குட்கா விவகாரத்தில், உரிமை குழு நடவடிக்கை எந்த நேரத்திலும் பாயும் என்ற நிலை காணப்படுகிறது. எனவே அதற்கு முன் திமுக எம்எல்ஏக்கள் 89 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்து சட்டசபையை கலைக்கும் நெருக்கடியை ஆளுநருக்கு உருவாக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனராம்.
எம்எல்ஏக்கள் கூட்டம்
இது குறித்து முக்கிய முடிவெடுப்பதற்காக, இன்று மாலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடுகிறது. அப்போது ஒட்டுமொத்த ராஜினாமா பற்றி முடிவு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
ஆட்சியை பாதிக்காது
18 எம்எல்ஏக்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில் திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தாலும் அது ஆளும் கட்சியை பாதிக்காது என்றே சட்ட வல்லுநர்களும், அரசியல் ஆலோசகர்களும் கூறுகின்றனர். எதிர்கட்சி இல்லாத சட்டசபை செயல்பட வாய்ப்பு உள்ளது என்றே கூறுகின்றனர்.
வலுவான எதிர்கட்சி
சட்டசபையில் 89 எம்எல்ஏக்களுடன் வலுவான எதிர்கட்சியாக திமுக உள்ளது. எனவே எதிர்க்கட்சியே இல்லாமல் எத்தனை நாட்களுக்கு சட்டசபையை நடத்த முடியும் என்பதும் முக்கியம். மக்களின் கொஞ்ச நஞ்ச பரிதாபத்தையும் அதிமுக மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகள் பறி கொடுக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.