பாமக கோட்டைக்குள்.. வேல்முருகனை இறக்கி விடும் திமுக.. பிளான் ஒர்க் அவுட் ஆகுமா
பாமகவுக்கு எதிராக வேல்முருகனை திமுக களம் இறக்க உள்ளது
Recommended Video
சென்னை: பாமகவை எப்படியாவது அதிர வைக்க வேண்டும் என்ற வேகத்தில் திமுக இருப்பதாக தெரிகிறது. காரணம் விக்கிரவாண்டியில் பாமகவின் பலத்துக்கு முன்னால் திமுக வீழ்ந்து விட்டது. அதேபோல வேலூரிலும் தடுமாறி போய் விட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக சட்டசபை தேர்தலில் பாமகவை அதிர வைக்க திமுக தீவிரமாக உள்ளது. அதற்காக, அது போட்டு வரும் திட்டங்கள் பலிக்குமா என்பதுதான் இப்போது பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.
பாமகவை வீழ்த்த திமுக கையில் எடுத்திருக்கும் அஸ்திரம் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன்தான். அவரை வைத்தே பாமகவை சாய்க்க திமுக திட்டமிடுகிறது.
வேல்முருகனுக்கும் வன்னியர் பெல்ட்டில் கணிசமான செல்வாக்கு உள்ளது. பாமக மீது அதிருப்தியில் உள்ளவர்கள், காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் வேல்முருகனுக்கு ஆதரவாக திரள்வார்கள் என்பது திமுகவின் கணக்காகும்.
உதயமானது தென்காசி மாவட்டம்.. கோலாகல விழா.. தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
வேல்முருகன்
இதை ஓரளவு நம்பலாம். வேல்முருகனுக்கு ஆதரவாக உள்ளோரின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டு வந்தாலே ஓரளவுக்கு திமுகவுக்கு பலம் கிடைக்கும்தான். ஆனால் அது மட்டும் போதுமா என்றால் நிச்சயம் போதாது.. இது வேல்முருகனுக்குமே கூட நன்றாக தெரியும்.
லோக்சபா தேர்தல்
பாமகவைப் பொறுத்தவரை இன்னும் கூட அது சிங்கமாகத்தான் உள்ளது. அதன் பலம் முழுமையாக போய் விடவில்லை. இதை கடந்த லோக்சபா தேர்தலிலும் சரி, இடைத் தேர்தலிலும் சரி தமிழகம் கண்டது. பாமக லோக்சபா தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால் அதன் வாக்கு வங்கி பாதிக்கப்படவில்லை. இதுதான் நிதர்சனம்.
அன்புமணி
டாக்டர் ராமதாஸ் மீதும், அன்புமணி ராமதாஸ் மீதும் அபிமானம் வைத்துள்ளவர்கள் அப்படியேதான் உள்ளனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதை தகர்ப்பது என்பது மலையை தகர்க்க உளியுடன் வந்த கதையாகவே முடியும். இதை திமுகவும் கூட புரிந்து வைத்துள்ளது. ஆனால் இப்போதிலிருந்தே பாமகவின் வாக்கு வங்கியை மெல்ல மெல்ல தகர்த்து அதை தம் பக்கம் திருப்புவது என்பதே திமுகவின் திட்டமாக உள்ளது.
திமுக பிளான்
இதை மனதில் வைத்துத்தான் வேல்முருகனை அது களம் இறக்கியுள்ளது. வேல்முருகன் மூலம் பாமகவின் வாக்கு வங்கிக்குள் புகுந்து தம் பக்கம் திருப்புவதே திமுகவின் பிளான். இதை எந்த அளவுக்கு வேல்முருகன் பக்கவாக செய்யப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியது. அது அவ்வளவு எளிதான பணியல்ல என்பதாலும், பாமகவின் வாக்கு வங்கியை சீர்குலைக்குத் தேவையான காரணிகள் இல்லாததும் வேல்முருகனின் பணியை கடுமையாக்கியுள்ளது என்றே கூற வேண்டும்.
சுதாரிப்பு
கடந்த லோக்சபா தேர்தலின்போதே திமுகவுக்கு ஆதரவாக பாமக எதிர்ப்பு வாக்குகளை திரட்டும் பணியில் ஈடுபட்டவர் வேல்முருகன். அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது. இருப்பினும் வருகிற சட்டசபைத் தேர்தலின்போதும் அதே போன்ற நிலைமை இருக்குமா என்று கூறுவது கடினம். காரணம் தற்போது பாமக சுதாரித்து விட்டது. அதிமுக கூட்டணியில் வலுவான இடத்தில் உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் தேமுதிகவுடனும் இணக்கமாக போகும் மன நிலையில் அது உள்ளது.
வன்னியர் சமூகம்
நாளை ரஜினிகாந்த்தே கட்சி ஆரம்பித்து வந்தாலும் கூட அது திமுகவுக்குத்தான் பெரும் பாதிப்பாக அமையுமே தவிர பாமகவை பாதிக்காது. காரணம், ரஜினிக்கு வன்னியர் சமூகத்தினர் வாக்காளிப்பார்களா என்பது சந்தேகம்தான். காரணம், ரஜினி எதிர்ப்பு மன நிலையிலிருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை என்பதே உண்மை. எனவே பாமகவின் பலத்தை குறைத்து மதிப்பிட்டால் அது பாதகமாகவே முடியும் சூழலே காணப்படுகிறது.
நேருக்கு நேர்
இப்படிப்பட்ட சூழலில் களமிறங்கியுள்ள வேல்முருகனின் பணி எந்த அளவுக்கு திமுகவுக்கு சாதகமாக முடியும் என்பதை போகப் போகத்தான் பார்க்க முடியும். வருகிற உள்ளாட்சித் தேர்தலிலேயே வேல்முருகனின் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெறுகிறது. கணிசமான இடங்கள் அதற்கும் தரப்படும் என்று தெரிகிறது. அப்படி வரும் பட்சத்தில் பாமகவுடன் நேருக்கு நேர் மோதி வெல்லும் பணியில் வேல்முருகன் களம் இறங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை.