வானொலியில் தமிழ் செய்திகளை நிறுத்தும் முடிவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்- வீரமணி எச்சரிக்கை!
சென்னை: வானொலி நிலையங்களிலிருந்து தமிழ் செய்தி ஒலிபரப்புவதை நிறுத்தும் முடிவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். இல்லையேல் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
வீண்வம்பை விலைக்கு வாங்குவது என்பதில் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மத்தியில் உள்ள பாஜக ஆட்சி தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேசன் என்பதில் உள்ள நெய்வேலி என்ற பெயரை நீக்கி, என்.எல்.சி இந்தியா லிமிடெட் என்று பெயர் சூட்டியது பற்றிய எதிர்ப்பு அலை ஓயாத நிலையில், டில்லி, திருச்சி வானொலி நிலையங்களிலிருந்து ஒலிபரப்பப்படும் தமிழ்ச் செய்திகளை நிறுத்திட மத்திய பிஜேபி அரசு முடிவு செய்துள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. செம்மொழி தமிழுக்கு இக்கதியா?
ஹிந்தியையும், செத்த மொழியான சமஸ்கிருதத்தையும் ஒரு பக்கத்தில் வேகவேகமாக பாஜக பரப்பி வருகிறது. அதேவேளையில், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுள் ஒன்றும், உலகின் பல நாடுகளில் பேசப்படும் செம்மொழி தகுதி உள்ளதுமான தமிழ் செய்தி ஒலிபரப்பை டில்லி, திருச்சி வானொலி நிலையங்களிலிருந்து நிறுத்துவது என்ற மத்திய அரசின் முடிவு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பையும், போராட்ட உணர்வையும் கடுமையாக தூண்டும் என்று எச்சரிக்கின்றோம். இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகின்றோம்.
இல்லேயேல் நாடு தழுவிய அறப்போராட்டம் வானொலி நிலையங்கள் முன். விரைவில் அறிவிக்கப்படுவது உறுதி!உறுதி!!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.