விஜயபாஸ்கர் டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்?.. எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை
வருமான வரி சோதனைக்கு உட்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் உடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
வருமானவரித்துறை அதிகாரிகளின் தொடர் சோதனை பற்றியும், தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவி நீக்கம்
அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. அதே நேரத்தில் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய கட்சித்தலைமை யோசித்து வருகிறது.
விஜயபாஸ்கர்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலுக்காக அவரிடம் கைரேகை பெற்றது பற்றிய ரகசியம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தெரியும் என்று கூறப்படுகிறது, மேலும் மணல் மாஃபியா சேகர் ரெட்டியை போயஸ்தோட்டத்திற்கு அறிமுகம் செய்து வைத்தது விஜயபாஸ்கர்தான்.
கொடி பறக்குது
கடந்த சில ஆண்டுகளாகவே கட்சியிலும், போயஸ்கார்டனிலும் விஜயபாஸ்கரின் கொடிதான் பறக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடந்த பல சம்பவங்களுக்கு சாட்சியாக அமைச்சர் விஜயபாஸ்கர் இருந்துள்ளார்.
ஆட்சிக்கு சிக்கல்
சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ் கலகக்குரல் எழுப்பிய பின்னர் எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைத்து வைத்தனர் இதில் முக்கிய பங்காற்றியவர் விஜயபாஸ்கர்தான். எனவே அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்தால் ஆட்சிக்கு எதிராக சிக்கல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் கட்சி தலைமைக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஆலோசனை
எனவே ஆட்சிக்கும் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.