புதிய தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்... தமாகா காலத்தில் காங்கிரஸைக் காப்பாற்றியவர்!
சென்னை: தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக சோனியா காந்தியால் இன்று நியமிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக, திமுக எதிர்ப்பாளர் மட்டுமல்ல, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மிக நெருக்கடியான சூழலில் இருந்த போது அதனைக் காப்பாற்றியவரும் கூட.
கோஷ்டி அரசியலுக்குப் பெயர் பெற்ற தமிழக காங்கிரஸின் தலைவராக இருந்த பிஎஸ் ஞானதேசிகன் பதவி விலகிய நிலையில், அந்தப் பதவிக்கு திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், செல்லக்குமார், மாணிக் தாக்கூர் ஆகியோர் பெயர்கள் பலமாக அடிபட்டன.

ஆனால் எந்த யூகங்களுக்கும் இடம்தராமல் உடனடியாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பெயரை காங்கிரஸ் மேலிடம் இன்று அறிவித்துவிட்டது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் பாரம்பர்யம் மிக்கவர். பெரியாரின் பேரன் என்ற சிறப்பும் அவருக்குண்டு.
தொண்டர்களை அரவணைத்துச் செல்வதில் இப்போதுள்ள காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரைக் காட்டிலும் சிறந்தவர் என்று பெயரெடுத்தவர்.
தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.,க மற்றும் தி.மு.க.,வை கடுமையாக விமர்சிப்பவர். திராவிட கட்சித் தலைவர்களுக்கு இணையான பேச்சு திறன் கொண்ட அவர், தமிழ் மாநில காங்கிரஸ் செல்வாக்குடன் இருந்த காலத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்து கட்சியைக் காப்பாற்றியவர். பின்னர் தமாகாவும் காங்கிரஸும் ஒன்றிணைந்த போது, அதற்கு விலையாக தன் தலைமைப் பதவியைத் தந்தார்.
அதன் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்றபோது, மத்திய அரசியல் வர்த்தகத் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார்.
தமிழகத்தில் மக்கள் செல்வாக்குள்ள நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருடன் நல்ல நட்பில் இருப்பவர் இளங்கோவன்.
தமிழகத்தில் காங்கிரஸைத் தேட வேண்டியிருந்த சூழலில் தமிழக காங்கிரஸின் தலைவராக மீண்டும் இளங்கோவன் நியமிக்கப்பட்டிருப்பது, கோஷ்டி அரசியல் தாண்டி அக்கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியைத் தந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுத் தருவாரா இளங்கோவன்? தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், இப்போதே கூட்டணிக் கணக்குகளை இறுதி செய்யும் முனைப்பிலுள்ள மாநிலக் கட்சிகளுடன் என்ன மாதிரி போக்கை கடைப் பிடிக்கப் போகிறார் ஈவிகேஎஸ்?
-இவைதான் இப்போதைக்கு ஈவிகேஎஸ் முன் உள்ள கேள்விகள்!












Click it and Unblock the Notifications