மூப்பனாரின் "சைக்கிள்: இப்போது வேறு இரண்டு பேரிடம்.. அப்ப வாசனுக்கு என்ன கிடைக்கும்?
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸை மூப்பனார் உருவாக்கியபோது அவருக்கு தேர்தல் சின்னமாக சைக்கிள் சின்னம் கிடைத்தது. அப்போது ரஜினியின் ஆதரவுதான் மூப்பனாருக்கு பக்க பலமாக இருந்தது. எனவே அண்ணாமலை படத்தில் ரஜினி வைத்திருந்த சைக்கிளே சின்னமாக கிடைத்து விட்டதாக தமாகாவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேர்தல் பிரசாரத்திலும் கூட "ரெக்கை கட்டிப் பறக்குதுடி அய்யாவோட சைக்கிள்" என்றும் மாற்றிப் பாடி பிரசாரமும் செய்தனர்.
ஆனால் தற்போது ஜி.கே.வாசனுக்கு இதே சைக்கிள் சின்னம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மறக்க முடியாத சைக்கிள்
தமிழ் மாநில காங்கிரஸ் அதி வேகமாக பிறந்த கட்சி. அதேபோல அக்கட்சியின் சின்னமான சைக்கிளும் அதை விட வேகமாக தமிழகத்தில் பிரபலமானது.
ரஜினி புண்ணியத்தால்
அண்ணாமலை படத்தில் ரஜினி்யுடன் வரும் சைக்கிள் ரொம்பப் பிரபலமானது. எனவே ரஜினி ஆதரவுடன் பிறந்த தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைத்ததால் தமாகாவினர் பெரும் குஷியடைந்தனர்.
ரஜினி படத்துடன்
ரஜினி அண்ணாமலை படத்தில் சைக்கிளுடன் காட்சி தரும் படத்தையும், மூப்பனாரை சைக்கிளில் அமர வைத்து எடுத்த படத்தையும் போட்டு பட்டி தொட்டியெங்கும் படு வேகமாக பாப்புலராக்கி விட்டனர்.
அந்த சைக்கிள் நாயுடு - முலாயமிடம்
ஆனால் இன்று சைக்கிள் சின்னம் ஜி.கே.வாசன் ஆரம்பிக்கப் போகும் புதிய கட்சிக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். காரணம், அது இன்று இரு முக்கிய கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னமாக உள்ளது. அவர்கள் சந்திரபாபு நாயுடு மற்றும் முலாயம் சிங் யாதவ்.
தேசியக் கட்சியின் சின்னம்
நாயுடுவிடம் இருக்கும் சைக்கிள் சின்னம் மாநிலக் கட்சியின் சின்னமாகும். அதேசமயம், முலாயம் சிங்கிடம் இருப்பது தேசிய கட்சியின் சின்னமாக.
கிடைக்குமா
முலாயம் சிங்கிடம் சைக்கிள் சின்னம் இருந்தாலும் கூட, நாயுடுவிடம் சைக்கிள் சின்னம் இருப்பதால் வாசன் கட்சிக்கும் அது கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடம் உள்ளது. ஆனால் கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் கூறுகிறார்கள்.
பார்க்கலாம்... வாசன் கட்சிக்கு என்ன கிடைக்கும் என்பதை. பேசாமல், விஜய்யை கட்சியில் சேர்த்து கத்தி அல்லது துப்பாக்கி சின்னத்தை வாங்கி விடலாம்!