நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரர்... ஆட்சிக்கு வந்தால் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி... இ.ம.க. அறிவிப்பு
தூத்துக்குடி: தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தால் மக்களைக் கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன்படி, குடும்ப அட்டை ஒன்றிற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்தமாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இத்தேர்தலில் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவதாக அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அக்கட்சி வேட்பாளரை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்படி குடும்பஅட்டைக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்" என அதிரடி திட்டத்தை அறிவித்தார்.