"அம்மா" உணவகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா ஜிஎஸ்டி?
ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் அம்மா உணவகங்கள் தொடர்ந்து நடைபெறுமா? அல்லது விலையேற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: உணவு பொருள்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதால் அம்மா உணவகங்கள் தொடர்ந்து நடைபெறுமா? என்ற குழப்பம் எழுந்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இலவச மடிக்கணினி, இலவச சைக்கிள், தாலிக்குத் தங்கம், இலவச ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட எண்ணற்ற இலவசத் திட்டங்களை அமலாக்கினார்.
அதில் முக்கியமானது அம்மா உணகவம். 3 வேளையும் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் வயிறார உணவு அளிக்கும் திட்டமான அம்மா உணவகங்கள் ஏழைத் தொழிலாளர்கள் மத்தியில் பிரபலமானது.
1 ரூபாய்க்கு இட்லி
காலையில் இட்லி ரூ. 1க்கும், பொங்கல் ரூ. 5க்கும் விற்கப்படுகிறது. பொங்கல்- சாம்பார், லெமன், கருவேப்பிலை சாதம் போன்றவை ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3 -க்கும் விற்கப்படுகிறது. இரவில் 2 சப்பாத்தி ரூ. 3 -க்கு வழங்கப்படுகிறது.
யார் யார் பயன்படுத்தினர்?
இதை அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள், ஏழை நடுத்தர வர்க்க மக்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். அம்மா உணவகம் தரமான முறையில் உணவுகள் தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறது. சுத்திகரிக்கப்பட்ட
குடிநீரும் வழங்கப்படுவதால் பொது மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.
சென்னையில் 200 இடங்களில்...
சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் திறக்கப்பட்ட அம்மா உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததையடுத்து அரசு மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் மற்றும் மகப் பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட 7 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.
மொத்தம் 300 இடங்களில்...
மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள், அவர்களின் உறவினர்கள், உதவியாளர்கள் அம்மா உணவகத்தில் உள்ள உணவுகளை ஆர்வத்துடன் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் மேலும் 93 இடங்களில் அம்மா உணவகம் படிப்படியாக தொடங்கப்பட்டது. தற்போது மாநகராட்சி வார்டுகளில் 293 இடங்களிலும் 7 அரசு ஆஸ்பத்திரிகளில் என மொத்தம் 300 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
முன்னுதாரண திட்டங்கள்
சென்னை தவிர பிற மாநகரங்களிலும் கூட அம்மா உணவகங்கள் உள்ளன. இந்த திட்டத்தை முன்னுதாரணமாக கொண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் அன்னபூர்ணா கேண்டீன் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் படி ரூ. 13-க்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஜிஎஸ்டி அமல்
தற்போது ஜிஎஸ்டியில் சிறிய உணவகங்களுக்கு 5 சதவீதமும், நட்சத்திர ஹோட்டல்களுக்கு 28 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மா உணவகங்களின் கதி என்னவாகுமோ என்ற கவலை அங்கு 3 வேளை வயிறார உண்ணுவோரின் கவலையாக உள்ளது.
விலை கூடுமோ?
வரி விதிப்பினால் உணவு பொருள்களின் விலை கூடுமோ என்ற அச்சம் அவர்களை சூழ்ந்துள்ளது. சிறிய ஹோட்டல்களுக்கு வரி விதிக்கப்பட்டதால் அங்குள்ள கூட்டம் அம்மா உணவகம் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது. விலையைக் கூட்டினாலும் சிக்கல், கூட்டாமல் தொடர்ந்து நடத்தவும் முடியாது, நடத்தாமல் மூடினாலும் பெயர்தான் கெடும்.
என்ன செய்யப் போகிறது எடப்பாடி அரசு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.