ஒய் பிளட்?.. ஓ சேம் பிளட்.. இமான் அண்ணாச்சிக்கு இப்படி ஆகாம இருந்தா சரித்தான்!
சென்னை: உலகத் தமிழர்கள் வாய்கள் எல்லாம் இப்போது இமான் அண்ணாச்சியைப் பார்த்துதான் உச்சுக் கொட்டிக் கொண்டிருக்கிறன்றன. எய்யா...நல்லாதான இருந்தாரு.. பெறவு ஏன் இப்படி பண்ணாரு.. இப்படித்தான் அத்தனை பேரும் சோகமாக பார்க்கிறார்கள் அண்ணாச்சியை. காரணம், அண்ணாச்சி திடீரென அரசியலில் குதித்ததால்!
அண்ணாச்சிக்கும், அவரது குடும்பத்துக்கும் அரசியல் புதிதல்லதான். அவரது சித்தப்பாதான் எஸ்றா சற்குணம். கிறிஸ்தவப் பாதிரியாராக இருந்தாலும் பக்கா திமுக ஆதரவாளர் சற்குணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இந்த நிலையில் திடீரென அரசியலில் குதித்துள்ளார் இமான் அண்ணாச்சி. இதை நிச்சயம் பலரும் எதிர்பார்க்கவில்லை. காரணம், ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் சொந்த அண்ணாச்சியாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் இப்படி தன்னை ஒரு கட்சி சார்பானவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டது அவருக்கு எந்த வகையில் சரியாக வரும் என்று தெரியவில்லை.
அவரும்.. இவரும்!
2011 சட்டசபைத் தேர்தலிலும் இப்படித்தான் செய்தது திமுக. அப்போது காமெடியில் உச்சத்தில் இருந்த வடிவேலுவை திடீரென பிரசாரத்திற்கு அழைத்து வந்தது திமுக. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஒரு நபருக்காக ஒட்டுமொத்தத்தையும் இழந்தார்
விஜயகாந்த் என்பவரை எதிர்க்க திமுக பயன்படுத்திக் கொண்ட ஆயுதம்தான் வடிவேலு. ஆனால் அந்த ஆயுதம் கடைசியில் மழுங்கிப் போய் தூக்கிப் போடப்பட்டதே தவிர அது யாரையும் ஒரு துரும்பு அளவுக்குக் கூட பாதிக்கவில்லை. இருந்ததையும் இழந்தார் வடிவேலு.
இப்போது அண்ணாச்சி
இந்த நிலையில்தான் 2016 சட்டசபைத் தேர்தலுக்கு இமான் அண்ணாச்சியைப் பிடித்துள்ளது திமுக. இவராகப் போய்ச் சேர்ந்தாரா அல்லது அவர்கள் கூப்பிட்டுப் போனாரா என்று தெரியவில்லை. ஆனாலும் நிச்சயம் இமானுக்குத்தான் இப்போது நிறைய சவால்கள் வந்துள்ளன.
ஆட்சி மாறினால் சரி
தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சரி. இமான் அண்ணாச்சிக்குப் பிரச்சினை இருக்காது. ஒரு வேளை அதிமுகவே மீண்டும் வந்து விட்டால், நிச்சயம் புதிய ஆட்சியால் இமான் அண்ணாச்சி பழிவாங்கப்படலாம். மேலும் தற்போதைய நடிகர் சங்கமும் அதிமுக ஆதரவாளர்கள் நிரம்பியதாக உள்ளது. எனவே அவர்கள் மூலமும் மறைமுக நெருக்கடி வரலாம்.
தேவையில்லாததைப் பேச வேண்டி வரும்
பிரசாரத்தின்போது நாம் என்ன பேசினாலும் அது திரித்துப் பார்க்கப்படும் அல்லது வில்லங்கமாக பார்க்கப்படும். இதற்கு வடிவேலுவே சரியா உதாரணம்.
பேச்சு நல்லாத்தான் இருந்துச்சு
கடந்த சட்டசபைத் தேர்தலி்ன்போது வடிவேலு விஜயகாந்த்தை மட்டுமே குறி வைத்துப் பிரசாரம் செய்தார். அதிமுகவை அவர் தொடக் கூட இல்லை. ஆனாலும் அதிமுக தரப்போ, இன்று வரை நட்புப் பார்வை பார்க்கவே இல்லை. மேலும் அந்தத் தேர்தலோடு வடிவேலு ஓரம் கட்டுப்பட்டு விட்டார்.
நல்ல பெயர் போச்சு
வடிவேலுவுக்கு இன்று வரை உலகம் முழுவதும் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. இப்போது அவரது காமெடிக் காட்சிகளைப் பார்த்தாலும் குபுக்கென சிரிக்க வைத்து விடுகிறது. ஆனால் இன்று அவருக்கு படமே இல்லை. இந்த ஐந்து ஆண்டு காலத்தில் அவர் நடித்த படம் மொத்தமே 2 தான். அதுவும் சொந்தப் படம் மாதிரியான படங்கள் தான்.
இமான் கவனம்
கிட்டத்தட்ட வடிவேலு நிலையில்தான் இமான் அண்ணாச்சியும் உள்ளார். திமுகவுக்கு சாதகமாக முடிவு வந்தால் இமான் அண்ணாச்சி உச்சத்திற்குப் போகலாம். அப்படி நடக்காமல் போனால் சன் டிவி அதிகபட்சம் கலைஞர் டிவியோடு அவர் முடக்கப்படலாம், சினிமாவில் அவரும் வடிவேலு போல ஒதுக்கப்படும் அபாயமும் உண்டு.
சுருக்கமாகச் சொன்னால் .. நமக்கு இதெல்லாம் தேவையா அண்ணாச்சி?