தேவ்யானி விடுதலைக்குக் குரல் கொடுத்தவர்கள் தமிழக தம்பதியரின் விடுதலைக்கும் குரல் கொடுப்பார்களா?
சென்னை: அமெரிக்காவில் தரையில் வீசி குழந்தையை கொலை செய்த வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த அதன் பெற்றோர் மற்றும் குழந்தையை கவனித்துக்கொள்ளும் பணிப்பெண் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை கவனித்துக் கொள்ள பணிப்பெண்களை அமர்த்திக்கொள்வது வழக்கமான நடைமுறைதான்.
அப்படித்தான் கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வரும் தமிழக தம்பதியர் சிவகுமார், தேன்மொழி ஆகியோர் தங்களின் ஒன்றரை வயது மகனை கவனித்துக் கொள்ள கிஞ்ஜல் படேல் என்ற பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தினர். இவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான்.
தமிழக பெற்றோர்கள் கைது
அழுத குழந்தையை சமாதானம் செய்யாமல் அடித்துக் கொலை செய்துள்ளார் கிஞ்ஜல் படேல். இதற்காக பணிப்பெண்ணை மட்டும் கைது செய்யாமல், பெற்றோர்களையும் கைது செய்துள்ளனர் அமெரிக்க போலீசார். குழந்தைக்கு பலத்த காயம் ஏற்படும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பணிப்பெண் மீது தவறு
இதில் தவறு பணிப்பெண் மீது தானே தவிர தமிழக தம்பதியர் மீது அல்ல என்பது எல்லோருக்குமே தெரியும். எனினும் தமிழக தம்பதியரின் கைது நடவடிக்கைக்கு இந்திய அரசாங்கத்தரப்பில் இருந்து எந்தவித கண்டனக் குரலும் எழவில்லை. காரணம் இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த சாதாரணமானவர்கள் என்பதால்தான்.
தேவயானி கைதுக்கு கண்டனம்
அதேசமயம் அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒரு அதிகாரியாகப் பணியாற்றி வரும் தேவயானி கோப்ரகடே அண்மையில் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டு, கை விலங்கிடப்பட்டு அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் நிறுத்தப்பட்டார். இதற்கு இந்திய ஆட்சியாளர்கள் பெரும் அதிருப்தியை தெரிவித்தனர்.
சலுகைகள் ரத்து
அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கவில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு இதுவரை அளித்து வந்த சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்தனர்.
உறுப்பினர்களை சந்திக்க மறுத்தனர்.
அமெரிக்காவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டில் இருந்து இப்பொழுது நம் நாட்டிற்கு வந்துள்ள ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, மக்களவைத் தலைவர் மீரா குமார், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் ஆகியோர் மட்டுமல்லாது ராகுல் காந்தியும், மோடியும் கூட மறுத்தனர்.
தேவ்யானி மீதும் தவறு
ஆனால் தேவ்யானி, தனது வீட்டு வேலைகளைச் செய்வதற்காக சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண்ணை இந்தியாவிலிருந்து பொய்யான தகவல் கொடுத்து அமெரிக்காவில் நுழைய அனுமதி பெற்றார். மேலும் அங்கு அழைத்துச் சென்ற பிறகு அந்தப் பெண்ணுக்கு அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்ட சம்பளத்தையும் வழங்கவில்லை. தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்திற்கும் மேல் கடுமையாக வேலை செய்யச் சொன்னார். அதனால் அந்தப் பணிப் பெண் காவல் துறையிடம் புகார் கொடுக்க, அதன் விளைவுதான் இந்தக் கைது நடவடிக்கை.
யாருமே கேட்கவில்லை
பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு அதிகாரியின் தவறுகளைப் பற்றி யாருமே பேசவில்லை. பணிப் பெண்ணுக்கு உரிய ஊதியத்தைக் கொடுக்காமல் ஏமாற்றியது பற்றியோ, அந்தப் பெண்ணைச் சட்ட விதிக்குப் புறம்பாகக் கடுமையாகச் சுரண்டியது பற்றியோ இங்குள்ள ஆட்சியாளர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. ஆனால் தேவ்யானியை கைது செய்தது பற்றித்தான் பேசினார்கள்.
தமிழர்களுக்கு குரல் கொடுங்களேன்
இதேபோல செய்யாத குற்றத்திற்கு தமிழர்கள் அமெரிக்காவில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்திய அரசாங்கமோ, தமிழக அரசியல் தலைவர்களோ இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பார்களா? என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும்.