திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில்... நாளை கும்பாபிஷேகம்... ஜெ.வருகை?
சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு நாளை நடைபெறும் கும்பாபிஷேகத்தைக் காண முதல்வர் ஜெயலலிதா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திருவல்லிக்கேணி பகுதியில் காவல்துறையினர் கெடுபிடி அதிகரித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிடித்தமான கோயில்களில் முதன்மையானது திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில். ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் பார்த்தசாரதியை தரிசிக்க வருகை தருவார் ஜெயலலிதா.
இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை முன்னிட்டு கடந்த ஒரு ஆண்டுகளாக திருப்பணி வேலைகள் நடைபெற்றன. நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலை சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளிலும் புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு முன் அழகான தார்சாலைகள் போடப்பட்டுள்ளன.
முழுக்க முழுக்க முதல்வரின் வருகையை எதிர்நோக்கி வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால் இன்று இரவோ அல்லது நாளை அதிகாலையிலோ ஜெயலலிதா வருகை தருவார் என சுற்றுவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கம் போல் காவல்துறையினரின் கெடுபிடிகள் திருவல்லிக்கேணி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்திருக்கின்றன.
கோயிலுக்கு எதிரே உள்ள ஆண்டாள் நீராட்டு மண்டபத்தை பழங்காலத் தோற்றத்திற்கு கொண்டுவரும் வகையில் சுற்றியிருந்த அனைத்து சிறு கடைகளும் வலுக்கட்டாயமாக காலி செய்ய வைத்துள்ளனராம். சில சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டிருப்பதால் வாகன நெரிசலில் சிக்கி அள்ளாடுகிறது திருவல்லிக்கேணி.