சிறைவாசம்... 2004 தீபாவளிக்கு ஜெயேந்திரர்.. 2014 தீபாவளிக்கு ஜெயலலிதா..?
சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தீபாவளி நாளின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயேந்திரர். தீபாவளி நாளில் அவரை சிறையில் அடைத்தது அப்போதைய ஜெயலலிதா அரசு. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்போது அதே போல, ஜெயலலிதாவும் வருகிற தீபாவளி நாளில் சிறையில் இருக்க வேண்டி வருமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சட்ட சூழல்களைப் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு தீபாவளிக்குள் ஜாமீன் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே அவர் தீபாவளிக்கு முன்பே ஜாமீனில் வெளியே வருவாரா அல்லது தீபாவளியை சிறையில் கழிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒரு வேளை தீபாவளியன்று அவர் சிறையில் கழிக்க நேரிட்டால், நிச்சயம் அது ஜெயேந்திரர் ஆதரவாளர்களுக்கு கிட்டத்தட்ட பழிக்குப் பழி போலாகி விடும்.
சங்கரராமன் கொலையும் ஜெயேந்திரரும்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்தவர் இந்த சங்கரராமன். இவர் கோவில் அலுவலக அறையில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் கூலிப்படையினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தீபாவளி நாளில் கைதான ஜெயேந்திரர்
இதையடுத்து 2004ம் ஆண்டு தீபாவளி நாளன்று, ஆந்திராவில் வைத்து ஜெயேந்திரரையும், விஜயேந்திரரையும் தமிழக போலீஸார் அதிரடியாக கைது செய்து கொண்டு வந்தனர். சிறையிலும் அடைத்தனர்.
அதிர்ச்சியில் சங்கர மட ஆதரவாளர்கள்
ஜெயேந்திரரை தமிழக போலீஸார் கைது செய்து தீபாவளி நாளில் சிறையில் அடைத்த செயலால் ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதுவும் ஜெயலலிதா இப்படிச் செய்ததை அவர்களை ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.
பரிதாப வீடியோ
அதை விட முக்கியமாக ஜெயேந்திரர் காவலர்கள் பிடியில் இருக்கும் வீடியோவும், அவர் பரிதாபகரமான தோற்றத்தில் இருக்கும் காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
காட்சி திரும்புகிறது
இன்று ஜெயலலிதா சிறையில் அடைபட்டிருக்கிறார். ஜாமீனுக்காகப் போராடி வருகிறார். அவருக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அதிமுக வக்கீல்கள் அணுகியுள்ளனர்.
தீபாவளிக்கு முன்பு ஜாமீன் கிடைக்குமா
ஆனால் தீபாவளிக்கு முன்பு அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று அவரது மனு விசாரணைக்கு வருமா என்று தெரியவில்லை.
தலைமை நீதிபதியை நெருக்க தயக்கம்
ஏற்கனவே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அடுத்தடுத்து நெருக்குதல் கொடுத்து அவர்களை டென்ஷனாக்கி தாங்களும் டென்ஷனாகி, உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா நிலை ஏற்பட்டு விட்டது. அதேபோல உச்சநீதிமன்றத்திலும் பிரஷர் கொடுத்தால் ஏடாகூடமாகி விடுமே என்ற அச்சமும், தயக்கமும் அதிகமுவினரிடம் உள்ளது.
இன்று விட்டால் செவ்வாய்தான்
இன்று விசாரணை நடைபெற முடியாமல் போனால் செவ்வாய்க்கிழமைதான் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு பெஞ்ச் விசாரணைக்கு வரும். ஆனால் எடுத்த எடுப்பிலேயே தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
முதலில் நோட்டீஸ்
ஜெயலலிதாவின் மனுவை விசாரித்து முதலில் உரியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பார்கள். அதன் பிறகுதான் பரிசீலித்து ஜாமீன் தருவது குறித்தும், தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்தும் முடிவெடுத்து நீதிபதிகள் உத்தரவிடுவார்கள். இதற்கு சில நாட்களாகி விடும்.
18ம் தேதி முதல் லீவு
ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை தீபாவளி விடுமுறை வருகிறது. எனவே இந்த காலகட்டத்துக்கு முன்பாக ஜாமீன் கிடைத்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் 26ம் தேதிக்குப் பிறகுதான் வெளியில் வருவது குறித்து யோசிக்கவே முடியும்.
22ம் தேதி தீபாவளி
22ம் தேதி தீபாவளி வருகிறது. 18ம் தேதிக்குள் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காமல் போனால் அவர் தீபாவளியை பெங்களூர் சிறையில்தான் கழிக்க வேண்டி வரும்.
இடைக்கால ஜாமீனுக்கு வாய்ப்பு
இருப்பினும் ஜெயலலிதாவின் உடல் நிலை, அவரது சமூக அந்தஸ்து உள்ளிட்டவற்றைக் கருதி, அவருக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதை விசாரணை நாளன்றே நீதிபதிகள் அளிக்க முடியும். ஆனால் அதுவும் கூட நீதிபதிகளின் தனிப்பட்ட அதிகாரம். எனவே அதையும் உறுதியாக எதிர்பார்க்க முடியாத நிலை.
மொத்தத்தில் எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும் ஜெயலலிதா விவகாரத்தில் சிக்கலாகவே இருக்கிறது.