கமலும் ரஜினியும் கை கோர்த்தால்.. நடுவில் புகுந்து இறங்கி அடிப்பாரா சீமான்.. என்ன நடக்கும்?
கமல், ரஜினி இணைவது சீமானுக்கு சாதகமா அமையுமா என தெரியவில்லை
Recommended Video
சென்னை: கமலும் - ரஜினியும் ஒன்றிணைவது தமிழக அரசியலுக்கு திருப்பம் தருமா? குறிப்பாக, சீமானுக்கு இதன்மூலம் சாதக சூழல் ஏற்படுமா? அல்லது இவர்களின் பலம் சீமானை பின்னுக்கு தள்ளுமா? இப்படி பல கேள்விகள் கிளம்பி வருகின்றன.
என்ன ஆனதோ தெரியவில்லை.. திடீரென கமலும், ரஜினியும் ஒன்று கலந்து வருகின்றனர். '' தேவைப்பட்டால், ரஜினியுடன் இணைந்து செயல்படுவேன்'' என்றார் கமல்ஹாசன். "தமிழக மக்களின் நலனுக்காக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலுடன் இணைவேன்" என்றார் ரஜினி. இவர்களது இந்த திடீர் பேட்டிகள்தான் தமிழக அரசியலை சூடாக்கி வருகிறது.
இதுக்கு எதுக்கு பல பர்னிச்சர்களை இவங்க உடைச்சாங்க.. பேசாம ஆரம்பத்திலேயே சேர்ந்து வந்திருக்கலாமே என்பதுதான் பலரது கருத்தாக இப்போது எழுந்துள்ளது. ஆனால் இந்த இணைப்பை பல அரசியல் கட்சிகள் விரும்பவில்லை. "ரஜினி, கமல் மட்டுமல்ல ரஜினி, கமல், விஜய் சேர்ந்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும்" என்று முதல் ஆளாக வந்து கருத்து சொல்லிவிட்டார் அமைச்சர் ஜெயக்குமார்.
கமல் - ரஜினி சேர்வது இருக்கட்டும்.. ஆனால் இந்த கேள்விக்கு மட்டும் பதில் இல்லையே? என்ன செய்வார்கள்?
எதிர்ப்பு
இப்ப இது இல்லை மேட்டர்.. எல்லோருடைய கவனமும் சீமான் பக்கம்தான் திரும்பி உள்ளது. ரஜினி, கமல் இருவரும் அரசியல் பக்கம் திரும்பியபோது கமலுக்கு ஏகோபித்த ஆதரவைக் கொடுத்தவர் சீமான். கமல் அழைப்பின் பேரில் நேரில் போய் அவரை சந்திக்கவும் செய்தார் சீமான். ஆனால் ரஜினியை முற்று முழுதாக தீவிரமாக எதிர்க்கிறார் சீமான்.
நல்லா நடிங்க
"எங்களுடன் சேர்ந்து வாழ இனம் மாற தேவையில்லை. ஆனால் எங்களை ஆள்வதற்காக இனம் மாறினால் எங்களை விட மோசமான எதிரி இல்லை. உங்களின் படத்தை நாங்கள் விமர்சிக்கிறோமா? நீங்கள் நல்லா நடிங்க. ஆனால் எங்களை ஆள வேண்டும் என்று கனவில்கூட நினைக்கக் கூடாது. என் வரலாறு தெரியாமல் என்னை வழிநடத்த முடியாது.. வெற்றிடம் இருக்கிறது என்கிறார்.. நல்லக்கண்ணுவை விட ஒரு பெரும் தலைவர் இந்தியாவில் உண்டா... சுடுகாட்டில் கூட நிறைய வெற்றிடம் இருக்கரு, போய் நிரப்புங்க என்று சொல்லணும் போல இருக்கு" என்று பலமுறை இதே கருத்தை பலவாறாக சொல்லி வருகிறார் சீமான்.
மாறுபாடு
ஆனால், கமல் விஷயத்தில் மட்டும் சற்று மாறுபட்டிருந்தார். சக நடிகன் என்று வந்தபோது கமலை சீமான் விட்டு தந்ததே இல்லை.. மூத்தவர்.. சீனியர்.. நல்ல கலைஞன்.. ரஜினியைவிட சாதனைகள் பலபுரிந்தவர் " என்று வாய் நிரம்ப வார்த்தைகளை கூறியவர்.. ஆனால் அரசியல் என்று வரும்போது, அப்போதும் சீமான் தன்னிலைப்பாட்டில் உறுதியாகவே நிற்கிறார்.
மண்ணின் மைந்தர்கள்
ஒரு கட்டத்தில், கமலும், சீமானும் அரசியலில் கைகோர்த்தால் நன்றாக இருக்குமே என்றுகூட பலர் விரும்பினர். இதற்கு காரணம், இருவருமே இந்த மண்ணின் மைந்தர்கள். தமிழ் மீது பற்றுள்ளவர்கள். தமிழர்களின் உணர்வை உளப்பூர்வமான அலசி ஆராய்ந்து புரிந்து கொண்டவர்கள். சீமானின் தொண்டர்களாக இருந்தாலும் சரி, கமலின் மய்ய உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, மக்களிடையே தனித்துவம் பெற்று மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து வருபவர்கள். கொள்கை ரீதியாக மாறுபாடு, அல்லது சீனியர், ஜுனியர் என்ற அரசியல் கால ஒப்பீடு இவர்களுக்கு இருக்கலாம், இவர்கள் ஒன்று சேர்ந்தால் அது ஒரு வலுவான கூட்டணியாக இருக்கும் என்றே கருதப்பட்டது. கடந்த லோக்சபா தேர்தலில் இருவரும் பெற்ற வாக்குகளும் கூட இதையே வலியுறுத்தின.
விஜயகாந்த்
ஆனால், சீமானோ தனித்து இயங்குவது என்பதிலேயே உறுதியாக இருக்கிறார். "கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த் தான் உண்மையான ஆண் மகன். இந்த கமல்ஹாஸன், ரஜினிகாந்த் எல்லாம் பேசக் கூடாது. யாரும் இல்லாத பொட்டலில் கம்பு எடுத்து வீசுவது இல்லை வீரம். ஜெயலலிதா இருக்கும்போது ரஜினியும், கமலும் ஏன் பேசவில்லை? நீங்கள் எல்லாம் ஹீரோக்கள் இல்லை ஜீரோக்கள்" என்று கமலையும் சேர்த்து விமர்சிக்கும் போக்குதான் சீமானிடம் இப்போதும் உள்ளது.
வாய்ப்பு
இந்நிலையில், கமலும், ரஜினியும் ஒன்று சேர்ந்தால், இது சீமானுக்கு சாதகமா? பாதகமா என உறுதியாக தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இரு பக்கமும் இறங்கி அடிக்க சீமானுக்கு அது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. கமல் என்னதான் தனித்துவத்தை விடாதவர் என்றாலும் கூட ரஜினி என்று வரும்போது அவர் இணைந்து போக முன்வருவார் என்றே சொல்லப்படுகிறது. காரணம், ரஜினி மீது எந்த சாயலும் இதுவரை இல்லை. மக்களிடம் நல்லதாக்கம் கொண்டவர். மேலும் அரசியலின் யதார்த்த சூழலை அவர் புரிந்து கொண்டுள்ளார் என்றே தெரிகிறது. இது கமலுக்கு சாதகம்தான்.. மய்ய உறுப்பினர்களும், மக்கள் மன்ற உறுப்பினர்களும் இணைவதால் ஒருபுது கலவை அரசியல் ஆர்வத்தை மக்களுக்கு ஏற்படுத்தும்.
சந்தர்ப்பவாத அரசியல்
ஆனால் இங்குதான் சீமானுக்கு ஒரு வலுவான கருத்து கிடைத்துள்ளது. கமல் - ரஜினி இணைந்தால் நிச்சயம் அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலாக அதை மக்களிடம் அவர் கொண்டு செல்வார் என்றே தெரிகிறது. காரணம், ரஜினி மீது மக்களுக்கு என்னதான் ஒரு அபிமானம் இருந்தாலும் கூட மக்கள் பிரச்சினைகளில் மக்களுடன் அவர் நிற்கவில்லை என்ற கறை உள்ளது. அப்படிப்பட்டவருடன் கமல் கை கோர்க்கும்போது நிச்சயம் அந்த கறையை சுட்டிக் காட்டி சீமான் அரசியல் செய்யக் கூடும்.
வலுவான பிடி
இரு பெரும் கறைகளாக மாறி நிற்கும் கமலும், ரஜினியும் எப்படி என் மக்களை கரை சேர்க்க முடியும் என்ற கேள்வியை நிச்சயம் சீமான் முன் வைக்கக் கூடும். மேலும் எந்தக் கொள்கையும் இல்லாத இவர்களா என் மண்ணின் அவலத்தை போக்குவார்கள் என்ற வாதத்தையும் சீமான் வைக்கக் கூடும். இதை விட சிறந்த சந்தர்ப்பவாதம் இருக்க முடியாது என்ற வலுவான பிடியும் சீமானுக்குக் கிடைக்கும் என்றே தெரிகிறது.
தெளிவான கொள்கை
கமல், ரஜினி இணையும்போது நிச்சயம் வாக்கு வங்கிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதை எப்படி சீமான் தனக்கு சாதகமான முறையில் மாற்றப் போகிறார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. திட்டவட்டமான கொள்கைகளை முன் வைத்து, தெளிவான கொள்கையுடன் நடை போட்டு வரும் சீமானுக்கும், ரஜினி கமல் கூட்டணிக்கும் இடையிலான மோதல் சுவாரஸ்யத்தை கொடுக்கும் என்பதை விட மக்கள் யார் பக்கம் நிற்கப் போகிறார்கள் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.