ஜெ. சமாதிக்கு அதிகாலையில் வந்த 'தல', ஓராண்டாகியும் நேரில் அஞ்சலி செலுத்தாத கமல்... இன்று வருவார்களா?
ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த நடிகர்கள் விஜய், அஜித் இன்று வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை : ஜெயலலிதா இறந்த போது நடிகர் அஜித் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததால் சென்னை திரும்பியவுடன் அதிகாலையில் ஜெ. சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ஓராண்டாகியும் ஜெயலலிதா சமாதியில் நடிகர் கமல் அஞ்சலி செலுத்தவில்லை. இவர்கள் இன்று சமாதிக்கு அஞ்சலி செலுத்த வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிசம்பர் 5 கடந்த ஆண்டு இதே நாளில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அப்பலோவின் அறிக்கைக்காக காத்திருந்தனர் தமிழக மக்கள். நிலைமை சற்று மோசம் என்று சொல்லி வந்த அப்பலோ மருத்துவமனை இறுதியில் இரவு 11 மணியளவில் ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை அறிவித்தது.
ஜெயலலிதா மரணமடைந்த செய்தி கேட்டு அதிமுகவினர் அதிர்ச்சியில் தவித்தனர். வன்முறை வெடிக்கும் என்று போலீசார் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் லேசான கோஷங்களைத் தவிர மக்கள் அமைதியே காத்தனர். ஜெயலலிதாவின் திடீர் மறைவு அனைவரையும் உறைய வைத்தது என்று கூட சொல்லலாம்.
அஞ்சலி செலுத்திய மக்கள்
தமிழகத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க சென்னை நகரின் சாலைகள் எல்லாம் வெறிச்சோடி வாகனங்கள் இயக்கப்படாமல் மயான அமைதியோடு இருந்தது. சென்னை ஓமந்தூரார் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.
அவசரமாக சென்னை திரும்பிய அஜித்
ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர். ஜெயலலிதாவின் மீது உள்ள அன்பால் நடிகர் அஜித் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்ததை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார்.
மனைவியுடன் அஞ்சலி
டிசம்பர் 7ம் தேதி அதிகாலையில் சென்னை வந்த அஜித் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரைக்கு சென்றார். தன்னுடைய மனைவி ஷாலினியுடன் ஜெயலலிதா சமாதியில் அஜித் அஞ்சலி செலுத்தினார்.
சமாதி செல்லாத கமல்
இதே போன்று நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடனும், நடிகர் விஜய், விஷால் உள்ளிட்டோரும் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். புதிய படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருந்த நடிகர் கமல்ஹாசன் ஜெயலலிதா மறைவிற்கு 'சார்ந்தோர் அனைவருக்கும் இரங்கல்' என்று மட்டும் டுவீட்டியிருந்தார். ஆனால் சென்னை திரும்பிய பின்னர் அவர் ஜெயலலிதா சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை.
அஞ்சலி செலுத்த வருவார்களா?
இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவு தினம் முடிந்து ஓராண்டு ஆகும் நிலையில் இன்று ஏராளமான அதிமுகவினர், அமைச்சர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நள்ளிரவு, அதிகாலை விசிட் வந்த திரைத்துறையினர் இந்த முறையும் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.