காசு தர மாட்டேன் என்று கூறும் கமலுக்கு தோள் கொடுப்பார்களா மக்கள்?
Recommended Video
சென்னை: இடைத்தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ எதுவாக இருந்தாலும் பணம் புழங்கும் நிலையில் ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டேன் என்று தைரியமாக கூறும் கமல் போன்ற அரசியல்வாதிகளை மக்கள் ஆதரிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் என்றாலே எந்த கட்சி மக்களுக்கு நல்லது செய்யும் என்று யோசிக்கும் காலம்போய் எந்த கட்சி எவ்வளவு ரூபா கொடுப்பாங்க என்று நினைக்கும் அளவுக்கு கேலவமான நிலைக்கு மக்களைக் கொண்டு போய் விட்டன கட்சிகள்.
இதற்கு மிகச் சிறந்த சாம்பிள் ஆர்கே நகர் இடைத்தேர்தல். திருமங்கலத்தில் ஆரம்பித்த இந்த அசிங்கம், ஆர்.கே.நகரில் மகா கேவலமாக மாறியது. இங்கு டிடிவி தினகரன் மற்றும் அதிமுக ஆகியன ஒரு வோட்டுக்கு ரூ.10000 வரை கொடுத்ததாக தேர்தல் ஆணையத்திலேயே திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் அளித்தன. டிடிவி தினகரன் அணியோ ரூ. 20 நோட்டை டோக்கனாக கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
சமூக வலைதளங்கள்
இந்த சமயத்தில் ஐய்யோ நம்ம தொகுதிக்கு இப்ப இடைத்தேர்தல் வரலையே என்றும் நாம் ஆர்கே நகர் தொகுதிக்குள்பட்ட பகுதியில் இல்லாமல் போய்விட்டாமே என்று சமூகவலைதளங்களில் மக்கள் புலம்பும் அளவுக்கு மகா கேவலமாக இருந்தது நிலைமை.
கட்சியை தொடங்கினார்
இன்னும் சில இடங்களில் தேர்தல் என்று வந்துவிட்டாலே உங்கள் தெருவில் பணம் கொடுத்தார்களா, எவ்வளவு கொடுத்தார்கள் என சின்னத்தின் பெயரை குறிப்பிட்டு டிஸ்கஷன்களும் நடக்கும். நிலைமை இப்படியிருக்க கமல்ஹாசன் நேற்று கட்சியை தொடங்கினார்.
கட் அண்ட் ரைட்
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரிட்டுள்ள அவர், தன் கட்சியின் கொள்கைகளை அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில் வோட்டுக்கு பணம் தரமாட்டேன். அந்த பணத்தை உங்களின் ஒட்டுமொத்த நலனுக்காக செலவு செய்வோம் என்று அதிரடியாக அறி்வித்தார்.
மக்கள் குற்றச்சாட்டு
இதற்காகவே இவரைப் பாராட்டலாம். இவர் போன்ற அரசியல்வாதிகளை மக்கள் ஆதரிக்க வேண்டும். ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்துவிட்டு அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் சுரண்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்காத மக்களே இருக்க மாட்டார்கள்.
கேள்வி கேட்க முடியாது
சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத இடங்கள் ஏராளம் உண்டு. இதற்கெல்லாம் காரணம் மக்கள் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளதால்தான்.
மக்கள் சிந்திக்க வேண்டும்
காசு வாங்காமல் வோட்டு போட்டால் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் இவற்றை தருகிறோம் என்று கூறும் அரசியல்வாதிகளை நம்பினால் இவை அனைத்தும் கிடைக்கும். வெறும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடுக்கப்படும் வோட்டுக்கான துட்டை நம்பினால் தேர்தலுக்கு தேர்தல் நம் தலையில் துண்டு போட்டு கொள்ள வேண்டியதுதான். மக்கள் இனியாவது சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் அறிவுறுத்தலாகும்.