"ரப்பர் பேன்ட்" கட்சிகளுடன் கார்த்திக் கூட்டணி.. கிடைக்கப் போவது விடியலா அலலது பொங்கலா??
சென்னை: நீங்க சேர்க்காட்டி என்ன.. நாங்களாகவே சேர்ந்துக்குவோமே என்று, நடிகர் கார்த்திக் தலைமையில் யாராலும் சீண்டப்படாத நான்கு கட்சிகள் சேர்ந்து ஒரு அவியலை.. உருவாக்கியுள்ளன.. விடியல் கூட்டணி என்ற பெயரில்.
ஆக இவர்களையும் சேர்த்தால் (என்ன பண்றது.. இப்படித்தானே போட்டாக வேண்டும்) திமுக, அதிமுக, தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக, விடியல் கூட்டணி என மொத்தம் 6 முனைக் கூட்டணியை சந்தித்துள்ளது தமிழக தேர்தல் களம்.
யாராலும் கண்டு கொள்ளப்படாமல் கைவிடப்பட்ட கார்த்திக், டாக்டர் சேதுராமன், தமிழ் மக்கள் கட்சி, மக்கள் மாநாடு கட்சி ஆகியவைதான் தற்போது கைகோர்த்து புது அணியை உருவாக்கியுள்ளவையாகும். பெயரை விடியல் கூட்டணி என்று வைத்துள்ளனர்.
எந்தக் கூட்டணியிலும் இதுவரை உருப்படியாக இருந்ததில்லை கார்த்திக். தெளிவான நிலைப்பாடு இல்லாதவர். கட்சி ஆரம்பித்தது முதலே குழப்பமாகவே இருக்கும் ஒரே தலைவர் கார்த்திக்தான். கிளம்பும் இடத்திலிருந்து போகும் இடத்திற்கு இவர் தெளிவாகப் போய்ச் சேர்ந்ததாக சரித்திரமே இல்லை.
நடப்புத் தேர்தலிலும் கூட திமுக அவரை கூட்டணிக்கு அழைத்தது. அவரும் ஸ்டாலினைப் பார்த்துப் பேச கிளம்பத்தான் செய்தார். ஆனால் அறிவாலயம் போகக் கிளம்பியவர் வேறு எங்கேயோ போய் விட்டார். ஜெயலலிதா இவரை கண்டு கொள்ளவே இல்லை.
சேதுராமன் கதை அதை விட சோகமானது. ஜெயலலிதா கூப்பிட்டார். பார்த்தார், சிரிக்க சிரிக்கப் பேசினார். ஆனால் சீட் கொடுக்காமல் அனுப்பிவிட்டார். ஏன் என்று டாக்டர் சேதுராமனுக்கு இதுவரை காரணமே தெரியவில்லை.
மக்கள் மாநாடு கட்சி, தமிழ் மக்கள் கட்சியெல்லாம் யார் என்றே தெரியாத "ரப்பர் பேன்ட்" சைஸில் உள்ள குட்டியூண்டு கட்சிகள். கார்த்திக் கூட்டணியில் இருக்கோம் என்று கொஞ்சம் ஜாலியாக கூறிக் கொள்ள இவர்களுக்கெல்லாம் இது ஒரு நல்ல வாய்ப்பு + அரிய வாய்ப்பு.
இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறார்கள், எப்படிப் பிரசாரம் செய்யப் போகிறார்கள், என்ன சின்னத்தில் போட்டியிடுவார்கள்... என்பது சத்தியமாக இதுவரை தெரியவில்லை.!
இதை விட ரொம்ப முக்கியம் - தேர்தல் வரை இந்தக் கூட்டணி கலையாமல், குலையாமல் இருக்குமா என்பதுதான!