ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி வாக்களிக்கமாட்டார்: துரைமுருகனின் சஸ்பென்சை உடைத்த மு.க.ஸ்டாலின்
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க கருணாநிதி வருவாரா? என்பது குறித்து சஸ்பென்சாக பதிலளித்தார் திமுக மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன். அதேநேரம், கருணாநிதி வாக்களிக்க மாட்டார் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று நேரத்தில் தெரிவித்தார்.
குடியரசு தலைவர் தேர்தலையொட்டி தலைமைச் செயலகத்தில் வாக்களித்த பிறகு நிருபர்களிடம் பேசிய துரைமுருகன் கூறுகையில், வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் மீராகுமாரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார்.
திமுக தலைவர் கருணாநிதி, வாக்களிக்க வருவாரா என்று நிருபர்கள் கேட்டனர். பதிலளித்த அவர், நீங்களே பொறுத்திருந்து பாருங்கள். மாலை 5 மணிவரை காத்திருந்து தெரிந்துகொள்ளுங்கள் என்றார்.
இதனிடையே இந்த பேட்டி வெளியான ஒரு மணி நேரத்தில், ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், மருத்துவர்கள் அறிவுரையை ஏற்று கருணாநிதி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருவதாகவும், எனவே ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி வாக்களிக்க வர மா்டார் என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் கூட கருணாநிதி பங்கேற்க சட்டசபைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.