வந்து சேர்ந்த உடனேயே குவிய தொடங்கிய புகார்கள்.. அதிமுகவில் நீடிப்பாரா 'க'...?
சென்னை: திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 மாதங்களுக்குப் பின்னர் அதிமுகவில் இணைந்திருக்கிறார் கருப்பசாமி பாண்டியன் இணைந்திருக்கிறார். இதன்மூலம் திருநெல்வேலி மாவட்ட அதிமுகவில் மேலும் ஓர் அதிகார மையம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் கருப்பசாமி பாண்டியன் இணைந்த வேகத்தில் அவரைப்பற்றிய புகார் கடிதங்கள் இப்போது வலம் வரத் தொடங்கியுள்தாம்.
15 நாட்களுக்கு முன், தி.மு.க தலைவருக்கு கருப்பசாமி பாண்டியன் எழுதியதாக கூறப்படும் உருக்கமான கடிதம், போயஸ் கார்டனுக்கு சென்றுள்ளதால் அதிமுகவில் 'கனா' எத்தனை நாட்கள் நீடிப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுகவிலும், திமுகவிலும் கோலோச்சிய அரசியல்வாதிகளில் ஒருவரான கருப்பசாமிபாண்டியன், அரசியலில் பல்வேறு பின்னடை வுகளையும் சந்தித்திருக்கிறார்.
நெல்லை கருப்பசாமி பாண்டியன்
எம்.ஜி.ஆர் காலத்தில் நெல்லையில் 1977ம் ஆண்டு ஆலங்குளம் தொகுதியிலும், 1980ல் பாளையங்கோட்டை தொகுதியிலும் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுகவில் இணைந்த பின் 2006ல் தென்காசியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
திமுக கோஷ்டிகள்
திமுகவில் இவர் மாவட்டச் செயலாளராக இருந்தபோது, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தலைமையில் ஒரு கோஷ்டியும், இவரது தலைமையில் ஒரு கோஷ்டி யுமாக செயல்பட்டு வந்தனர். ‘ஆனா' கோஷ்டி, ‘கானா' கோஷ்டி என இவ்விரு கோஷ்டிகளையும் அழைப்பது வழக்கம்.
பாலியல் புகார்
திமுக தலைமையிடம் விசுவாசமாக இருந்த கருப்பசாமி பாண்டியன் மீது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியது, பெரும் பின்னடைவானது. மேலும் கடந்த மக்களவைத் தேர்தலின்போது தனது மகன் சங்கருக்கு சீட் வாங்குவதற்கு இவர் மேற்கொண்ட முயற்சிகள் எடுபடாமல்போனது. இதனால் திமுகவிலிருந்து கருப்பசாமி பாண்டியன் ஒதுங்கியே இருந்தார்.
கட்சியில் இருந்து கட்டம்
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை கருப்பசாமிபாண்டியனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதை அடுத்து, திமுகவில் இருந்து கட்டம் கட்டப்பட்டார். கடந்த ஆண்டு மே 14ம் தேதி திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தார்.
காத்திருப்புக்கு பலன்
சட்டசபை தேர்தலின்போது கட்சியில் இணைய அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு தொடர்ந்து கடிதம் அளித்து வந்தார். கடந்த 14 மாதங்கள் காத்திருப்புக்குப் பின் மீண்டும் கருப்பசாமிபாண்டியன் அதிமுகவில் நேற்று இணைத்துக் கொள்ளப்பட்டார்.
அதிகார மையம்
கருப்பசாமிபாண்டியன் வருகையால் திருநெல்வேலி மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கருப்பசாமி பாண்டியன் இணைந்ததன் மூலம் நெல்லை மாவட்ட அதிமுகவில் மேலும் ஓர் அதிகார மையம் உருவெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரன்
தற்போது அதிமுகவில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் அனைவருமே அரசியலில் கருப்பசாமிபாண்டியனுக்கு இளையவர்கள்தான். இம் மாவட்டத்தில் அதிமுகவில் முக்கிய அதிகார மையமாக இருந்த முன்னாள் எம்எல்ஏ நயினார்நாகேந்திரன், முன்னாள் திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான முத்துக்கருப்பன் ஆகியோர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
கலக்கத்தில் நெல்லை அதிமுகவினர்
'கானா'வின் வருகையினால் கலக்கமடைந்துள்ள இளையவர்கள், இப்போதே 'கான' பற்றிய கடிதம் ஒன்றை போயஸ் கார்டனுக்கு தட்டி விட்டிருக்கிறார்களாம். இதன் மூலம் கானாவின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்பதே நெல்லை மாவட்ட அதிமுகவினரின் எண்ணம்.
தியாகம் செய்ய தயார்
அதிமுகவில் இருந்து அழைப்பு வராத காரணத்தால் கருப்பசாமி பாண்டியன் கடந்த, 11ம் தேதி, மிக உருக்கமாக, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதினார்.அதில், நடந்த தவறுகளுக்கு மன்னிப்பும் கேட்டிருந்ததுடன், 'எஞ்சியிருக்கும் என் வாழ்நாளில், தமிழகத்தில் கலைஞர் ஆட்சி மலர, அனைத்து தியாகங்களையும் செய்ய தயாராக இருக்கிறேன்' என்று குறிப்பிட்டு உள்ளாராம்..
கடித நகலால் கலக்கம்
தி.மு.க.வில் இணைய கடிதம் கொடுத்து இருந்த நிலையில், போயஸ் தோட்டத்தில் இருந்து திடீர் அழைப்பு வர, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.கவில் நேற்று இணைந்து விட்டார். இதையடுத்து, கருணாநிதிக்கு, கருப்பசாமி பாண்டியன் எழுதிய கடிதத்தின் நகலை, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நெல்லை மாவட்ட அ.தி.மு.கவினர் அனுப்பியிருக்கிறார்களாம்.
அதிமுகவில் 'கனா' நீடிப்பாரா? பார்க்கலாம்.