கொடநாடு மாதிரி சிறுதாவூரிலும் நடக்குமோ... அச்சத்தில் பாதுகாப்பு பணி போலீசார்
கொடநாடு பங்களாவில் நடந்த கொலை,கொள்ளை போல சிறுதாவூர் பங்களாவிலும் நடக்குமோ என்ற அச்சத்தில் தினமும் தவித்து வருகிறோம் என்று புலம்புகிறார்கள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் தமிழக போலீசார்.
காஞ்சிபுரம்: ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த கொடநாடு தேயிலை எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை கொள்ளை போலவும், மர்ம மரணங்கள் போலவும் சிறுதாவூர் பங்களாவில் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் தவிக்கிறார்கள் போலீசார்.
சென்னை அருகே உள்ள சிறுதாவூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுத்த பங்களா உள்ளது. இங்கு ஜெயலலிதா தங்கியிருந்த போது, ஒரு டிஎஸ்பி, 4 இன்ஸ்பெக்டர்கள், 10 எஸ்ஐக்கள் உள்ளிட்ட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகும் போலீசார் பாதுகாப்பு அப்படியே தொடருகிறது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா காவலாளி கொலை, போயஸ் கார்டன் முன்னாள் டிரைவர் மர்ம மரணம், கொடநாடு கொள்ளையில் சம்பந்தப்பட்ட சயான் குடும்பத்தினர் விபத்தில் மரணம் போன்ற சம்பவங்களால் சிறுதாவூர் பங்களாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
போலீசார் திணறல்
அதோடு, அடிக்கடி மேல் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கும்,சசிகலா உறவுகள் என்று வரும் நபர்களுக்கும் பதில் சொல்லி மாளமுடியவில்லை என்று நொந்துபோயுள்ளனர்.சிறுதாவூர் பங்களாவின் சாலை வழியாக வந்து செல்லும் விவசாயிகள் பொதுமக்கள் செய்யும் வாதங்களுக்கு போலீசாரிடம் உரிய பதில் இல்லை.
தைரியம் கொடுங்கள்
' எப்படியாவது எங்களை வேறு இட பாதுகாப்புப் பணிக்கு அனுப்புங்கள்' என உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு வருகிறார்களாம். அவர்களிடம் அதிகாரிகள், 'உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது. தைரியமாக பணி செய்யுங்கள், யாராவது உங்களை மிரட்டினாலோ, தாக்க முற்பட்டாலோ மைக் மூலம் எச்சரிக்கை செய்யுங்கள்' என்று தைரியம் கொடுத்துள்ளார்களாம்.
அப்போ கைவிட்டனரே
ஆனாலும் பயம் விலகாத சிறுதாவூர் பங்களா பாதுகாப்பு பணி போலீசார்,"சென்னையைப்புரட்டிய வர்தா புயலின்போது 100க்கும் மேற்பட்ட போலீசார் மழை கோட்டுகூட இல்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டோம். ஒரு அதிகாரிகூட வந்து பார்க்கவில்லை. இரவு நேரங்களில் பணி புரிபவர்களுக்கு டார்ச்லைட் கூட கொடுக்கவில்லை. பங்களாவில் பணிபுரிய விரும்ப வில்லை.
அடிக்கடி வரும் மன்னார்குடி கும்பல்
சசிகலாவின் உறவினர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். ஜெயலலிதா சம்பந்தப்பட்ட இடங்களில் தொடர் மரணங்கள் நிகழ்ந்துள்ளதால் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசு சம்பந்தப்பட்ட நபர்கள் இல்லாத பங்களாவிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பது ஏன் என தெரியவில்லை." என்று ஊடகங்களிடம் கொட்டித் தீர்த்துள்ளனர்.
முக்கிய ஆவணங்கள் உள்ளனவா
ஜெயலலிதாவுக்காக பாதுகாப்புப் பணிக்கு வந்த இவர்களை இன்னமும் அரசு அங்கேயே பாதுகாப்பில் வைத்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.ஒருவேளை ஜெயலலிதா எழுதிய உயில் உள்ளிட்ட ஆவணங்கள் சிறுதாவூர் பங்களாவுக்குள்ளே பதுக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் எழுகிறது என்கிறார்கள் போலீசார்.