இது வேலைக்கு ஆகாது.. நேரடியாக களமிறங்க முடிவு.. திருவாரூர் தேர்தலுக்கான அழகிரியின் கடைசி அஸ்திரம்!
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் நேரடியாக களமிறங்க அழகிரி முடிவெடுத்து இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கிசுகிசுக்கிறார்கள்.
சென்னை: திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் நேரடியாக களமிறங்க அழகிரி முடிவெடுத்து இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கிசுகிசுக்கிறார்கள். அதாவது இந்த தேர்தலில் அழகிரியே போட்டியிட வாய்ப்புள்ளது என்று அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது.
இந்த தொகுதியில் எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என்று அனைத்து கட்சிகளும் திட்டமிட்டு வருகிறது. இந்த கோதாவில் தற்போது அழகிரியும் இறங்கியுள்ளதாக தகவல் வருகிறது.
எதுவும் சொல்லவில்லை
கடந்த ஐந்தாம் தேதி அழகிரி மெரினாவில் அமைதி ஊர்வலம் நடத்தினார். தன்னுடைய தொண்டர்களை வைத்து பெரிய அமைதி ஊர்வலம் நடத்தினார். ஆனால் இதில் முக்கிய அறிவிப்பு எதையும் அவர் வெளியிடவில்லை. இது அவரது தொண்டர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.
திருவாரூர் தேர்தல்
இந்த நிலையில் அழகிரி சொல்வதாக இருந்த, இன்னும் சொல்லாமல் இருக்கும் அந்த முக்கிய அறிவிப்பு திருவாரூர் தேர்தல் பற்றியதுதான் என்று கூறப்படுகிறது. அதாவது திருவாரூர் தேர்தலில் அழகிரியே போட்டியிட வாய்ப்புள்ளது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கான பணிகளில் அவர் முன்பே இறங்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இப்போதே திட்டம்
இதற்காக அவர் ஒருவாரம் முன்பே பணிகளில் இறங்கிவிட்டார். ஆம், திருவாரூரில் இவரது ஆதரவாளர்கள் மக்களிடம் கருத்து கேட்டு வருகிறார்கள். அழகிரி தேர்தலில் நின்றால் வாக்களிப்பீர்களா என்று. அவர் கருணாநிதியின் மகன் என்பதால் நிறைய பேர் அவருக்கு ஆதரவாக கருத்து கூறுவதாக தகவல்கள் வந்துள்ளது. இதை காரணமாக வைத்தே தேர்தலில் போட்டியிட அவர் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
போட்டி
இந்த நிலையில் ஏற்கனவே திருவாரூர் தேர்தலில் வெற்றிபெற திமுக தீவிரமாக உள்ளது. அதிமுகவும் இதில் வெல்ல தீவிரமாக உள்ளது. டிடிவி தினகரன் யாரை வேட்பாளராக நிறுத்துவார் என்று இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது அழகிரியும் வர வாய்ப்புள்ளது என்று தகவல் வருவதால், திருவாரூர் தொகுதி மிக முக்கிய தொகுதியாக உருவெடுக்க உள்ளது.