திமுகவின் பிரசார பீரங்கியாக மாறுவாரா நமீதா....??
சென்னை: திமுகவில் சேர்ந்து லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் நடிகை நமீதா பிரசாரம் செய்யப் போகிறார். விரைவில் இதற்காக அவர் திமுகவில் முறைப்படி சேருவார்.
இதுதான் இப்போது லேட்டஸ்டாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான செய்தி. எந்த அளவுக்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் ரொம்ப சீரியஸாக இது பரவி வருகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது நடிகர் வடிவேலு படு தீவிரமாக திமுக கூட்டணிக்காக வாக்கு சேகரித்தார். போகிற இடமெல்லாம் தேமுதிக தலைவர் விஜயகாந்த்த்தை மிகக் காட்டமாக அவர் விமர்சித்தார்.
ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. தேமுதிகவை தனது கூட்டணியில் சேர்க்க திமுக தரப்பு கடுமையாக முயன்று வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்குப் புதிய பிரசார பீரங்கியை திமுக அறிமுகம் செய்யவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
வழக்கமாக குஷ்புதான் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவராக களம் இறக்கப்படுவார். இந்த முறை நடிகை நமீதாவை களம் இறக்க திமுக தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இந்த பரபரப்பு பேச்சு சொல்கிறது.
ஏற்கனவே கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரா நமீதா இருக்கிறார். விரைவில் அவர் திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபடுகிறது.
சமீபத்தில் ஒரு பேட்டியின்போது நான் நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன். அடுத்த மாதம் நான் சேரவுள்ள கட்சியின் பெயரை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். எனவே அடுத்த மாதவாக்கில் நமீதா திமுகவில் சேரக் கூடும் என்று பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.
நமீதா களம் இறக்கப்பட்டால் லோக்சபா தேர்தல் பிரசாரக் களம் ரொம்பவே சூடாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை...